Chennai News Highlights: ஜே.பி. நட்டா வாகனம் சென்னையில் விபத்து; ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK cadres police complaint against Nainar Nagenthran, BJP MLA Nainar Nagenthran, Nainar Nagenthran wrong speech, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி அதிமுக நிர்வாகிகள் புகார், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அதிமுக, பாஜக, BJP, AIADMK, Tamilnadu, tamilnadu politics

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

Advertisment

சென்னையில் இன்று (மே 4) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 92.39-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • May 05, 2025 06:33 IST

    ஜே.பி. நட்டா வாகனம் சென்னையில் விபத்து; ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “வண்டலூர் - மீஞ்சூர் சாலை அருகே மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பயணித்த கார் பழுதடைந்து சிறு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க அரசு வழங்கிய பழுதடைந்த புரோட்டோகால் வாகனத்தால் மத்திய அமைச்சரின் பாதுகாப்பிற்கு ஏதேனும் பங்கம் விளைந்திருந்தால், தமிழக வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாக பதிந்திருக்கும்; இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கம் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.



  • May 04, 2025 18:50 IST

    ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது

    ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர். தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீட் வினாத் தாள் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை பறிக்க முயன்றபோது காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • May 04, 2025 18:13 IST

    சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் பகலில் இருந்து இருள் மேகம் சூழ்ந்தது. மாலை 3.30 மணியில் இருந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சிங்கப்பூர், மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரூ, சூரத் ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.



  • May 04, 2025 16:47 IST

    சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

    தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன்படி தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் அம்பத்தூர், ஆவடி, பொழிச்சலூர், பல்லாவரம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • May 04, 2025 16:38 IST

    இஸ்ரேலில் தாக்குதல்: அபுதாபியில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. ஜார்டான் வான் பரப்பில் இருந்து இஸ்ரேல் வான் பரப்பிற்குள் ஏர் இந்தியா விமானம் செல்லவிருந்தது. அப்போது, டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், விமானம் அபுதாபியில் பத்திரமாக தரையிறங்கியது. மேலும், டெல் அவிவ் , டெல்லி இடையேயான விமான சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.



  • May 04, 2025 16:35 IST

    அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • May 04, 2025 16:17 IST

    சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை- புகார்

    சென்னையில் ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, மட்டன் குழம்பில் முழு தவளை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டுவரும் நாவலடி கொங்குநாடு என்ற தனியார் ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, கடையின் ஊழியர் கொண்டு வந்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றுள்ளனர். அதில், முழு தவளை ஒன்று உயிரிழந்த நிலையில், சாப்பிடும் இலையில் பரிமாறப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் இதுதொடர்பாக ஓட்டலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • May 04, 2025 16:14 IST

    மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் பலி

    ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டம் ஜம்ஷத்பூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது தளத்தில் மருந்தக வார்டின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நோயாளிகள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விபத்தில் நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். 



  • May 04, 2025 16:10 IST

    நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி

    மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல. மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



  • May 04, 2025 16:06 IST

    128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார்

    பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: யோகா பயிற்சியாளரும் காசியில் வசிப்பவருமான சிவானந்த் பாபாஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. யோகா மற்றும் தியானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். யோகா மூலம் சமூகத்திற்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.



  • May 04, 2025 16:03 IST

    சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற்பகல் வரை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.



  • May 04, 2025 14:53 IST

    இஸ்ரேல் விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

    இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் மீது, ஏமனின் ஹவுதி அமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பையும் மீறி, பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணை தாக்கியுள்ளது. விமான நிலையத்திலும், அருகில் சாலையில் சென்ற பொதுமக்களும், ஏவுகணை தாக்குதலை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, விமான நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள், மூடப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து இஸ்ரேல் சென்ற ஏர் இந்தியா விமானம், திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது



  • May 04, 2025 14:51 IST

    9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்

    தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கருர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்யும். மே 5, 6ம் தேதிகளில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 04, 2025 13:37 IST

    நீட் தேர்வு அச்சம் - மாணவி தற்கொலை

    செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி கயல்விழியின் உடலை மீட்டு மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • May 04, 2025 13:35 IST

    ஆந்திராவில் காய்கறிகளுடன் செம்மரக்கட்டை கடத்தல்

    ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காய்கறி ஏற்றிச் செல்வது போல் 2 டன் செம்மரக்கட்டை கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் கடத்தல்காரர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் 



  • May 04, 2025 13:33 IST

    பிரதமருடன் விமானப்படை தளபதி ஆலோசனை

    டெல்லியில் பிரதமர் மோடி உடன் இந்திய விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து விமானப்படை தளபதி ஆலோசனை நடத்தி வருகிறார்



  • May 04, 2025 12:23 IST

    பள்ளிகளில் சாதி பாகுபாடு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

    தமிழக பள்ளிகளில் சாதி பாகுபாடும் அரிவாள் கலாச்சாரமும் உருவாகி உள்ளது. 3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி எதுவும் தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் பேசுகிறார். மாணவர்களின் படிப்புகளில் அரசியலை கலக்க வேண்டாம் என்று தமிழிசை கூறினார். 



  • May 04, 2025 12:00 IST

    துணை பொதுச் செயலாளர் பொறுப்பு எதிர்பார்த்தேன் - நல்லதம்பி

    துணை பொதுச் செயலாளர் பொறுப்பு எதிர்பார்த்தேன். எழும்பூர் தொகுதியில் எனக்கு நல்ல பெயர் உள்ளது வாய்ப்பளித்தால் மீண்டும் போட்டியிடுவேன் என முன்னாள் எம்.எல்.ஏ  நல்லதம்பி கூறினார்.



  • May 04, 2025 11:43 IST

    நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு

    நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு, சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. முழுக்கை சட்டை, கம்மல், ஷூ அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • May 04, 2025 10:59 IST

    போரால் வரும் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும் - வைகோ

    போர் மூலம் இரு தரப்பிலும் ஏற்படும் பாதிப்புகளை மத்திய அரசு சிந்திக்க வேண்டும்  என  வைகோ கூறியுள்ளார். 



  • May 04, 2025 10:26 IST

    "மாநிலங்களவை சீட்-அதிமுக கூறியது உண்மைதான்" - எல்.கே.சுதீஷ்

    தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மைதான். நேரம் வரும்போது பேசுவேன் என தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.



  • May 04, 2025 10:23 IST

    புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் திறப்பு

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. வண்ண மலர்களைக் கொண்டு கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர்கள் இசைக்கருவிகளை இசைத்து வரவேற்றனர். 



  • May 04, 2025 09:58 IST

    பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது - நயினார் நாகேந்திரன்

    பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி, "பல்வேறு மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. இதில் கவனம் செலுத்தாமல், பா.ஜ.க மீது மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • May 04, 2025 08:28 IST

    தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 04, 2025 07:46 IST

    வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



  • May 04, 2025 07:25 IST

    இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் - அதிக வெப்பம் நிலவும் என்று எதிர்பார்ப்பு

    கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்குகிறது. இது மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், அதிக வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • May 04, 2025 07:13 IST

    கேரளாவில் ஹவாலா பணம் பறிமுதல்

    கேரள மாநிலம், கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ. 4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • May 04, 2025 06:46 IST

    நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வு

    இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: