/indian-express-tamil/media/media_files/2025/04/17/JuB1y59ZHLo4dRcvuG0a.jpg)
Today Latest Live News Update in Tamil 28 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 28, 2025 21:57 IST
ஐபோனுக்கு போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்த 4 பேர் கைது
சென்னையில், ஐபோனுக்கு போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர்.
-
Jul 28, 2025 21:40 IST
குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகளை திருப்பி அனுப்ப வேண்டும் - தமிழக அரசு பதில் மனு
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகளை திருப்பி அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மீறுவதற்காக, மாறுவேடத்தில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டதாக, தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jul 28, 2025 21:04 IST
சோழர் விழாவை கொச்சைப்படுத்தும் விஜய் - கரு. நாகராஜன் குற்றச்சாட்டு
கங்கைகொண்ட சோழபுரம் விழாவை, த.வெ.க தலைவர் விஜய் கொச்சைப்படுத்துகிறார் என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க - பா.ஜ.கவிற்கு முடிச்சு போடும் விஜய்யின் சூழ்ச்சி என்னவென்று புரியவில்லை என்றும், நானும் ரௌடி தான் என்பது போல் தனது இருப்பை விஜய் காட்டிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
-
Jul 28, 2025 20:40 IST
அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் மீண்டும் மனு
அன்புமணி மேற்கொண்டு வரும் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணத்திற்கு மீண்டும் தடை விதிக்கக் கோரி பா.ம.க நிறுவனர் ராமதாஸ், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, உரிய அனுமதியின்றி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்து, டி.ஜி.பி-யிடம் ராமதாஸ் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
Jul 28, 2025 20:26 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - அடையாள அணிவகுப்பு குறித்து நீதிபதி கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அவரது சகோதரர் கீனோஸ் வழக்கு தொடர்ந்தார். இதற்கான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இதன் விசாரணையின் போது, கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக மனுதாரர் வாதிட்டார். எனினும், இது அரசியல் படுகொலை அல்ல எனவும், காவல்துறையின் விசாரணை திருப்தி அளிக்கிறது என்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கொலையை நேரில் பார்த்த சாட்சி முன்னிலையில், ஏன் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
-
Jul 28, 2025 20:00 IST
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமல்ல - ஜெய்சங்கர் விளக்கம்
“இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமல்ல. இந்தியா-பாக். இடையிலான தாக்குதல் நிறுத்தத்துக்கும் வர்த்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் பேசிக் கொள்ளவே இல்லை” என்று ஆப்ரேஷன் சிந்தூர் விவாதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்
-
Jul 28, 2025 19:50 IST
சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது வழக்கு - ஸ்டாலின் கண்டனம்
சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பினரின் புகாரில் கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "சத்தீஸ்கரில் பஜ்ரங் தளத்தால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தலுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருப்பதைப் பார்ப்பது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த இலக்கு வைக்கப்பட்ட கும்பல் நடவடிக்கை, அரசின் செயலற்ற தன்மையால் செயல்படுத்தப்பட்ட வகுப்புவாத விழிப்புணர்வின் ஆபத்தான வடிவத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் சிறுபான்மையினர் பயத்திற்கு அல்ல, கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்." என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
Jul 28, 2025 19:28 IST
‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் - ஆகஸ்ட் 2-ல் ரிலீஸ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர உள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது
-
Jul 28, 2025 19:11 IST
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் தொடரும் - இ.பி.எஸ்
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் தொடரும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி. 10 மாவட்டங்களில் 46 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். தமிழகத்தில் மக்களே, மக்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை. எனது எழுச்சிப்பயணம் தொடரும், மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயப்போவதில்லை." என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Jul 28, 2025 19:09 IST
ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதம் - மக்களவையில் நாளை இரவு 7 மணிக்கு பேசும் மோடி?
ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதேபோல், அமைச்சர் அமித் ஷா-வும் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 28, 2025 18:24 IST
பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்
கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க. சோழ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே அளித்திருந்தால், தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு இதை கையில் எடுத்திருக்காது என்று த.வெ.க தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) July 28, 2025
-
Jul 28, 2025 17:09 IST
துல்கரின் காந்தா திரைப்படம் வெளியீடு
துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'காந்தா' படத்தின் டீசர் வெளியானது. தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் காந்தா திரைப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ராணா டக்குபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
-
Jul 28, 2025 17:06 IST
அஜீத்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்
அஜித்குமார் தான் நிகிதாவிடம் இருந்து முதலில் கார் சாவி வாங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில் முதலில் சாவி வாங்கியது செக்யூரிட்டி முருகன் தான் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 28, 2025 16:35 IST
பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும் - ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Jul 28, 2025 15:59 IST
எதிர்க்கட்சிகள் கடும் அமளி
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 28, 2025 15:33 IST
என் மீது அவதூறு பரப்பவே மகன் மீது வழக்கு - மன்சூர் அலிகான்
ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, என்ன நடப்பது என தெரியாமல் வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா? விசாரணை மேற்கொள்ளாமல், எனது மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார். எனது மகனுடன் பழகிய அனைவருக்கும் தெரியும், அவன் எவ்வாறு பேசுவான் என்று கஞ்சா அடித்தார் என தெரிந்தவுடன் எனது மகனை நானே அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் தவறு செய்யும் பட்சத்தில் ஒரு தந்தையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன் காவல்துறை என் மகன் மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்குப்பதிவு சம்பந்தமாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
-
Jul 28, 2025 15:28 IST
ஆபரேஷன் சிந்தூர் - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் மே 6, 7 தேதிகளில் இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ வீரர்களின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த சாமானிய மக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை. 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன என்று ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
-
Jul 28, 2025 15:27 IST
ஆபரேஷன் சிந்தூர் மூலம் 100 தீவிரவாதிகளை அழித்துள்ளோம் - ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூர் மூலம் 100 தீவிரவாதிகளை அழித்துள்ளோம். பாகிஸ்தானின் ட்ரோன்களை ஆகாஷ் மற்றும் எஸ் 400 ஏவுகணை அமைப்புகள் மூலம் தகர்த்தோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
Jul 28, 2025 15:22 IST
இந்திய ராணுவத்துக்கு நிகர் ஏதும் இல்லை - ராஜ்நாத் சிங் பெருமிதம்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியப் படைகள் எல்லையை மட்டுமல்ல; நாட்டின் மானத்தையும் தான் காப்பாற்றியது. இந்திய ராணுவத்துக்கு நிகர் ஏதும் இல்லை" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது.” என்று கூறினார்.
-
Jul 28, 2025 14:07 IST
‘ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் விதித்தது சரி’ - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பதில் மனு
"ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் விதித்தது சரி", "ஆளுநர்கள் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது. விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பை திருப்பி அனுப்ப வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குடியரசுத் தலைவர் கேட்ட 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கும் தீர்ப்பிலேயே பதில் உள்ளது என்றும் கேரள அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
-
Jul 28, 2025 13:12 IST
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
மக்களவை மீண்டும் தொடங்கிய சில நிமிடங்களில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது; நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 28, 2025 12:25 IST
தாம்பரம் பகுதிகளில் நடப்பு ஆண்டில் 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் கமிஷனர் விளக்கம்
தாம்பரம் காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டில் இதுவரை 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள் புழக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக காவல் ஆணையர் இந்த விளக்கத்தை அளித்தார். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பாக கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
Jul 28, 2025 12:20 IST
சோனி நிறுவனத்திற்கு எதிரான இளையராஜா மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்
இசையமைப்பாளர் இளையராஜா, சோனி நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் 1.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற இளையராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இன்றைய தினம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இளையராஜாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
Jul 28, 2025 11:51 IST
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 28, 2025 11:29 IST
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
-
Jul 28, 2025 10:52 IST
மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 28, 2025
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையிலிருந்து… -
Jul 28, 2025 10:49 IST
மோடி நாடாளுமன்றம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வந்தார்; லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
-
Jul 28, 2025 10:27 IST
என்.டி.ஏ. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்
டெல்லி | அகில இந்திய இமாம் சங்க (AIIA) தலைவர் மௌலானா சஜிட் ரஷிதி தொலைக்காட்சி விவாதத்தின் போது சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து NDA எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
#WATCH | Delhi | NDA MPs hold a protest outside the Parliament against All India Imam Association (AIIA) President Moulana Sajid Rashidi's derogatory remark against Samajwadi Party MP Dimple Yadav during a television debate pic.twitter.com/hvknkItEBF
— ANI (@ANI) July 28, 2025 -
Jul 28, 2025 10:25 IST
மக்களவையில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கருத்து
மக்களவையில் 'ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இதுகுறித்து பேசுகையில், "இன்று மக்களவையில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மக்கள் மனதில் இருக்கும் பல கேள்விகளை எங்கள் தலைவர்கள் எழுப்புவார்கள். அரசு இதற்குப் பதிலளிக்க வேண்டும், அவர்கள் சரியான பதிலைக் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர் இதற்குப் பதிலளிக்க வேண்டும். எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளை எழுப்புவார், பிரதமர் எங்களுக்குப் பதிலளிப்பார் என்று நம்புகிறோம். ஏனென்றால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த பதில்களை மக்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.
#WATCH | Delhi: On Operation Sindoor to be discussed in Parliament, Congress MP Vijayakumar alias Vijay Vasanth says, "Today the Operation Sindoor is going to be discussed in the House and our leaders will raise a lot of questions which are in the minds of the people. The… pic.twitter.com/gh2dag2Lf7
— ANI (@ANI) July 28, 2025 -
Jul 28, 2025 09:54 IST
ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள்
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு உருவாகிறது என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
-
Jul 28, 2025 09:34 IST
ரஷியா-வடகொரியா நேரடி விமான சேவை தொடக்கம்
கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதன் பயண நேரம் சுமார் 10 நாட்கள் ஆகும். இதனால் நேரடி விமான சேவை தொடங்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன.
-
Jul 28, 2025 09:06 IST
"தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழை இருக்கும்"
அடுத்த மாதம் (ஆகஸ்டு) தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர். முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான இடைபட்ட காலத்தில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
-
Jul 28, 2025 08:51 IST
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், 7-வது ஊதிய குழு சம்பளத்தை வழங்க கோரியும் புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர்களின் போராட்டத்தால் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை.
-
Jul 28, 2025 08:38 IST
அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்கின்றனர்.
-
Jul 28, 2025 08:37 IST
நாசாவில் 3,900 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்
பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவால், நாசாவில் 3,900 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ட்ரம்பின் முடிவால் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக நாசா ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 28, 2025 08:16 IST
இந்தியாவில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு
மார்ச் – ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் ஆயிரத்து 962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Jul 28, 2025 07:59 IST
பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை
பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதள மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திலிருந்து 30-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி எஃப் 16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.
-
Jul 28, 2025 07:39 IST
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jul 28, 2025 07:19 IST
மேட்டூரில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25ம் தேதி மீண்டும் நிரம்பியது. இதனால், நீர் திறப்பும் விநாடிக்கு 75,400 கனஅடியிலிருந்து 1 லட்சத்து 400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், 3வது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
Jul 28, 2025 07:11 IST
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்கள் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 28, 2025 07:11 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jul 28, 2025 07:10 IST
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - போலீஸ் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் குமரிமுனை ரவுண்டானா பகுதியில் காவல்துறை அனுமதியின்றி நேற்று முன்தினம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
-
Jul 28, 2025 07:10 IST
ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் தரப்பில் தீவிரமாக பேசக்கூடிய தலைவர்களை களத்தில் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.