/indian-express-tamil/media/media_files/2025/06/19/screenshot-2025-06-19-144107-2025-06-19-14-41-33.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 19, 2025 15:17 IST
ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய இருவர் கைது
வண்ணாரப்பேட்டையில் நண்பரை பார்க்க சென்ற ஐகோர்ட் வழக்கறிஞரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினித் குமார், சந்தோஷ் ஆகிய இருவரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது வீண் வாக்குவாதம் செய்து தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
-
Jun 19, 2025 14:57 IST
மீண்டும் தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
Jun 19, 2025 14:33 IST
உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்
நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
-
Jun 19, 2025 14:05 IST
பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்: அன்புமணி
பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். சேலத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் இருவரும் பங்கேற்காத நிலையில் அன்புமணி பேசியுள்ளார்.
-
Jun 19, 2025 13:43 IST
‘தக் லைஃப்’ வழக்கு: ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?’ - சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஒரு நகைச்சுவை நடிகர் உணர்வுபூர்வமாகப் பேசினால் கூட அச்சுறுத்தல்களும், சட்டவிரோத வேலைகளும் நடக்கின்றன என்று கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. கமல்ஹாசனின் 'தக் லைவ்' (Thug Life) திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், வன்முறைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், "நாளை இதே போன்று ஒரு நாடகத்திற்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது" தக் லைஃப் படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால், அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும்; வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும்; கடுமையான நடவடிக்கை எடுக்க வேனண்டம் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 19, 2025 13:24 IST
தக் லைஃப் வழக்கு: கர்நாடக பிலிம் சேம்பருக்கு - சுப்ரீம் கோர்ட் கண்டனம்
நடிகர் கமல்ஹாசன் பேசியது அவதூறாக இருந்திருந்தால், அவதூறு வழக்கு மட்டுமே தொடர்ந்திருக்க வேண்டும் என்று கர்நாடகாவில் பிலிம் சேம்பருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
'தக் லைவ்' (Tak Live) திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாததால் ₹30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Jun 19, 2025 12:53 IST
கீழடியில் கிடைத்திருப்பது மானுடத்தின் பெருமை; அரசியல் பிழைத்தோர் உணர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் தமிழர்களின் பெருமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்தின் பெருமை. கீழடியில் பாடுபட்டு வெளிக்கொண்டு வந்தவற்றைத் தடுப்போர் வரலாற்றில் புதையுண்டு போவர். கீழடியில் கிடைத்திருப்பது தமிழர் பெருமை மட்டுமல்ல; மானுடத்தின் பெருமை. கிடைத்ததைக் கொண்டாடி, அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே நமது கடமை. இந்தக் கடமையை 'அரசியல் பிழைத்தோர்' உணர வேண்டும்: என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 19, 2025 12:32 IST
கள்ளக்குறிச்சி சம்பவம் ஓராண்டு நிறைவு: கள்ளச்சாராயம் அறவே இல்லாத நிலையை உருவாக்குவோம் - இ.பி.எஸ் உறுதி
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலை மீண்டும் வரும்" என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், "2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்கும் அதுவே நீதியாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 19, 2025 12:27 IST
இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 11.9% - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.9% ஆக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், மோட்டார் வாகனங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் தொழில் முனைவோர்களில் பெண்களின் பங்கு 30% ஆக உயர்ந்துள்ளது என்ற முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டார்.
-
Jun 19, 2025 12:12 IST
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை ஆய்வு செய்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை ஆலந்தூரில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
Jun 19, 2025 11:50 IST
டிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை.
சிறுவன் கட த்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
-
Jun 19, 2025 11:24 IST
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டியை அமெரிக்காவுக்கு அனுப்பும் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டியை ஆய்வு செய்ய இந்தியா நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர்.
-
Jun 19, 2025 11:20 IST
தக்லைஃப் ரிலீஸானால் பாதுகாப்பு வழங்கப்படும்
`கர்நாடகாவில் `தக் லைஃப்' திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது கர்நாடக அரசு -
Jun 19, 2025 11:18 IST
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது.
பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jun 19, 2025 10:34 IST
ராகுல் காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்"
-பிரதமர் மோடி -
Jun 19, 2025 09:57 IST
டெல்லி-லே இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
டெல்லியில் இருந்து 180 பேருடன் லே-க்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை அடுத்து விமானம் மீண்டும் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது; லேவை நெருங்கிய சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
-
Jun 19, 2025 09:56 IST
'தக் லைப்' தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது”
பெங்களூருவில் 'தக் லைப்' படம் திரையிடப்பட்டால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதற்காக கன்னட அமைப்புகளின் தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். முதற்கட்டமாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவரான பிரவீன் ஷெட்டிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். பெங்களூருவில் தக்லைப் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை. பெங்களூரு சுதந்திர பூங்காவில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது. சட்டத்திற்கு எதிராக வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையானது என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
-
Jun 19, 2025 09:48 IST
சென்னை: ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,265க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 19, 2025 09:47 IST
"தக் லைப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்"
கர்நாடகாவில் தக் லைப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.
-
Jun 19, 2025 09:36 IST
அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது
அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 187 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
Jun 19, 2025 09:12 IST
வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணல் மீண்டும் தொடக்கம்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் மாணவர் விசாக்களுக்கான நேர்காணலை அண்மையில் நிறுத்தியிருந்தது. மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வுசெய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 19, 2025 09:10 IST
"கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும்"
கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 19, 2025 09:06 IST
மெட்ரோ வழித்தட விபத்து - 4 பொறியாளர்கள் பணிநீக்கம்
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் வழித்தட ராட்சத கார்டர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், மெட்ரோ நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் கவனக்குறைவாக செயல்பட்ட 4 பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 19, 2025 08:43 IST
பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி
பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்புமணி ராமதாஸ், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட பொதுக்குழுவில் இன்று பங்கேற்க உள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Jun 19, 2025 08:37 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு. படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
Jun 19, 2025 08:26 IST
சேலத்தில் இன்று அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம்
சேலத்தில் இன்று முற்பகலில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருக்கிறார். பிற்பகலில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறும் நிலையில் மூத்த நிர்வாகிகளான ஜி.கே.மணியும், சட்டமன்ற உறுப்பினர் அருளும் பங்கேற்கமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
Jun 19, 2025 08:02 IST
வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் குறைப்பு
வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்களின் சேவையை 15% குறைப்பதாக ஏர் இந்தியா விமானம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல், ஐரோப்பியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இரவு நேரத்தில் வான்வழி பயன்பாட்டிற்கு தடை விதிப்பு மற்றும் விமான போக்குவரத்துத்துறையின் ஆய்வு போன்றவற்றின் காரணமாக கடந்த 6 நாட்களில் 83 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. -
Jun 19, 2025 08:02 IST
வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
-
Jun 19, 2025 08:00 IST
பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி
கேரள மாநிலம் பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் குமரனை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். முண்டூரில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
Jun 19, 2025 07:54 IST
ராகுல் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒளிமயமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் வெற்றி நமக்குத்தான்; இது ரத்த பந்தம் அல்ல. சிந்தனை மற்றும் நோக்கத்தின் மூலம் இணைந்த பந்தம்” என எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jun 19, 2025 07:53 IST
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் 19-ம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஜூன் 24 2025 ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் கன மழை பதிவான நிலையில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்துள்ளது
-
Jun 19, 2025 07:52 IST
4 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
குஜராத் காடி, விஸ்வதார், கேரளாவின் நிலாம்பூர், பஞ்சாப்பின் லூதியானா, மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று முன் தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே கட்சியினர் பலரும் வாக்களிக்க வரிசையில் நின்று வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 19, 2025 07:36 IST
அரசு பள்ளிகளில் 3.12 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்க்கை
சென்னை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 985 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாக செங்கல்பட்டு (9,528 பேர்), திருப்பூர் (9,385), சேலம் (8,573), தென்காசி (8,019) போன்ற மாவட்டங்கள் வருகின்றன. கடந்த ஆண்டு 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
-
Jun 19, 2025 07:34 IST
பராமரிப்பு பணி - இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், காலை 8 முதல் பிற்பகல் 3.15 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். மேலும் அந்த நேரங்களில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் ரயில்கள் உள்பட மொத்தம் 25 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
-
Jun 19, 2025 07:21 IST
ஈரான்-இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாா்: புதின்
மோதலில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா். மேற்கு ஆசியாவில் அணு அபாயம் இருப்பதாக கற்பனையில் எழுப்பப்பட்டுவந்த எச்சரிக்கை தற்போது உண்மையாகிவருவதாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
Jun 19, 2025 07:20 IST
கீழடி நாகரிகம் தமிழர்களின் தனித்துவமானது: ஸ்டாலின்
கீழடி நாகரிகம் தமிழர்களின் தனித்துவமான நாகரிகம் என்பதை அகழாய்வு மெய்ப்பித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது; தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை பாராட்டி மகிழ்கிறேன். கீழடி தமிழர் தாய்மடி என தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Jun 19, 2025 07:12 IST
ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா வருகை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வந்து சேர்ந்தனர். ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதற்கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் மாணவர்கள் அனைவரும் அமெரிக்கா வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. தெஹ்ரானில் கல்வி பயின்று வரும் எஞ்சிய இந்திய மாணவர்களும் விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.