Chennai News Highlights: “தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” - மின்வாரியம் அறிவுறுத்தல்!

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruchirappalli power cut today august 6 tuesday Tamil News

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.90-க்கும், டீசல் விலை, ரூ92.48-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Feb 07, 2025 00:29 IST

    பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்பது தான் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

    சேலம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோவை பதிவிட்டு `அய்யகோ, திமுகவை பாருங்கள்' என்று ஈபிஎஸ் எழுதியிருந்தார். ஆனால் கள்ளச்சாராய சப்ளை செய்த அதிமுக பிரமுகர் ராஜா கைதாகி சிறையில் உள்ளார். பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’ தான் என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Feb 07, 2025 00:24 IST

    சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பறந்து போ’.

    ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பறந்து போ’. இந்த படம் வரும் கோடை விடுமுறையின்போது வெளியாகவுள்ள நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பறந்து போ’ திரைப்படத்தை பார்த்துவிட்டு பார்வையாளர்கள் கைத்தட்டி பாராட்டினர்.



  • Advertisment
    Advertisements
  • Feb 06, 2025 21:07 IST

    கட்சி தொடங்கிய உடனே நான் தான் முதல்வர் என்று சொல்வது மக்களிடையே எடுபடாது: மு.க.ஸ்டாலின்

    நெல்லையில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், கட்சி தொடங்கிய உடனே நான் தான் முதல்வர் என்று சொல்வது மக்களிடையே எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க என்று கூறியுள்ளார்.



  • Feb 06, 2025 20:13 IST

    சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களை அடக்க வேண்டும்: திருமாவளவன்

    தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களைத் தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Feb 06, 2025 20:11 IST

    ஓய்வை அறிவித்தார் மார்கஸ் ஸ்டோய்னிஸ்

    ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ODI கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



  • Feb 06, 2025 20:09 IST

    மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பா.ஜ.க அரசு தான்: நரேந்திர மோடி

    புதிய நாடாளுமன்றத்தில் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை இருந்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பா.ஜ.க அரசு தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



  • Feb 06, 2025 19:42 IST

    12-ம் வகுப்பு மாணவர்களுக்க நாளை முதல் செய்முறை தேர்வு

    தமிழ்'நாட்டில் நாளை (பிப்ரவரி 7) முதல் வரும் 14 ந்தேதி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல் பிப்ரவரி 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.



  • Feb 06, 2025 19:04 IST

    ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற பாஜக வழக்கறிஞர் மனு

    அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சிபிஐக்கோ சிறப்பு புலனாய்வு குழுக்கோ மாற்ற வேண்டும் என பாஜக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துளள நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.



  • Feb 06, 2025 18:59 IST

    கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் மிகப் பெரிய மோசடி: நீதிபதி காட்டம் 

    பல்கலைக்கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது என்பது மிகப் பெரிய மோசடி. அரசு துறைகளில் விதிகளின்படி பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Feb 06, 2025 18:07 IST

    "தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது" - இ.பி.எஸ் தரப்பு  வாதம்  

    உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி  அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார். 

    இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என்று  எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. 

     



  • Feb 06, 2025 18:00 IST

    இந்திய வீராங்கனை அசத்தல்

    ஐ.சி.சி ஜனவரி மாதத்திற்காக Player of the Month விருது பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா. வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை கரிஷ்மா ராம்ஹராக், ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனே ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்



  • Feb 06, 2025 17:51 IST

    ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் - நாடு முழுதும் இலவச பயணம் 

    ஆண்டுதோறும் மூன்றாயிரம் ரூபாய் செலுத்தினால்  இந்தியா முழுவதும் டோல்கேட்டில் இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். 



  • Feb 06, 2025 17:42 IST

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்

    அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரும் அளவுக்கு அவர்கள் தீவிரவாதிகளா? கொலை பாதகர்களா? என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

    டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா? அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.

    இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

    அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்…கொஞ்சம் எதிர்ப்பு. அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது? ” என காட்டமாக தெரிவித்துள்ளார்



  • Feb 06, 2025 17:22 IST

    தேசமே முதன்மை என்பதுதான் பா.ஜ.க-வின் முன்னுரிமை - மோடி பேச்சு

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். அதில், “குடியரசுத் தலைவரின் உரை உத்வேகம் அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.ஜனாதிபதியின் உரை நம் அனைவருக்கும் முன்னோக்கி செல்லும் வழியையும் காட்டியது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வளர்ச்சி மீதான பார்வையால் நாட்டு மக்கள் தங்களை 3வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி உறுதி செய்வதே எங்கள் முயற்சி ஆகும்.

    மக்களவை தேர்தலில் இரண்டு முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். 3 தசாப்தங்களாக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஓபிசி ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.ஓபிசி ஆணையத்துக்கு பாஜக அரசுதான் சட்ட அங்கீகாரம் வழங்கியது; பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு தரப்பட்டது. பட்டியலினம் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் இதை வரவேற்றனர். இரு அவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் பாஜக அரசு தான். புதிய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை கவுரவப்படுத்துவதாகும்.பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எஸ்.டி.. எஸ்.சி. சட்டங்களை வலுப்படுத்தியுள்ளோம். தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை; மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.



  • Feb 06, 2025 17:08 IST

    நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்: ஸ்டாலின் பதிவு

    அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்! அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், துடியலூர் – கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன். அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்!" என்று கூறியுள்ளார்.

     



  • Feb 06, 2025 16:27 IST

    திருப்பதி பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வர வேளாண் பல்கலைக்.க்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Feb 06, 2025 16:06 IST

    சமூகநீதி வேடம் கலைகிறது; பொய்வேடம் தானாகவே கலையும் - த.வெ.க தலைவர் விஜய்

    ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என தி.மு.க அரசை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். பீகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சமூக நீதி பேசும் தி.மு.க அரசு, தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கைத் திருவிழாவான முதல் மாநில மாநாட்டில், சமூக நீதியைப் பின்பற்றும் மண்ணான தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தேன். மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற கழகத்தின் செயற்குழுக் கூட்டத்திலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம்.

    இந்த விவகாரத்தில், மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. எனவேதான், பிகார் மாநில அரசும் கர்நாடக மாநில அரசும் ஏற்கெனவே சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலங்கானா மாநில அரசும் வெறும் 50 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை (Caste Survey) நடத்தி முடித்திருக்கிறது.

    அதுமட்டுமின்றி, ஒருபடி மேலே சென்று, அந்த ஆய்வு அறிக்கை மீது சட்டசபையின் சிறப்பு அமர்வுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் தொடங்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

    இத்தனைக்குப் பிறகும், தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள்.

    அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரக் காரணமாக இருந்த போராட்டத்தை நடத்தி, இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியவர்தான் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார்.

    பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர்.

    சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் சாதி கணக்கெடுப்பு குறித்த ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப்போகிறார்களா?

    அப்படியெனில், தெலங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி, சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவதும் எப்படி?

    மற்ற மாநிலங்கள்போல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லையே, ஏன்?

    இப்படி, எத்தனைக் கேள்விகள் கேட்டாலும், தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த நேரத்தில், ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார். 



  • Feb 06, 2025 15:39 IST

    இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

    "பல்வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம் பெயர்ந்த நமது இந்தியர்கள் பல்வேறு குற்றங்களுக்கு இரையாகின்றனர். இந்தியாவிற்கு திரும்பியவர்கள், தங்களின் கொடூரமான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்கள் எந்த விதத்திலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவுடன் பேசி வருகிறோம்'' என்று அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். 



  • Feb 06, 2025 14:48 IST

    சட்டப்படியே கை, கால்களில் விலங்கு போடப்பட்டது - வெளியுறவு அமைச்சர் விளக்கம்

    சட்டப்படியே அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் விலங்கிடப்படவில்லை சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதியது அல்ல என மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்



  • Feb 06, 2025 14:46 IST

    இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு – வெளியான அதிர்ச்சி வீடியோ

    அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில், இந்தியர்கள் 104 பேரை, கை, கால்களில் விலங்கு பூட்டி அழைத்து வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன



  • Feb 06, 2025 14:05 IST

    சர்ச்சை பேச்சு - சீமானை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு

    கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது



  • Feb 06, 2025 13:46 IST

    டாடா சூரிய மின் உற்பத்தி ஆலையை தொடங்கிவைத்த ஸ்டாலின்

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், டாடா சூரிய மின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்



  • Feb 06, 2025 13:17 IST

    இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்; அமைச்சர் விளக்கம்

    அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியை தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார் 



  • Feb 06, 2025 13:16 IST

    முதல் ஒருநாள் போட்டி - இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

    நாக்பூரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை



  • Feb 06, 2025 13:01 IST

    மாலை 4 மணிக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

    நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு விலங்கிடப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது பதிலுரையை வழங்க உள்ளார்



  • Feb 06, 2025 12:55 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு கிராம் 7,930க்கும் ஒரு சவரன் ரூ. 63,440க்கும் விற்பனையாகிறது



  • Feb 06, 2025 12:31 IST

    கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கம் – ராகுல் காந்தி

    டெல்லியில் யு.ஜி.சி வரைவு விதிகளுக்கு எதிராக தி.மு.க மாணவரணி நடத்தும் ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, யு.ஜி.சி விதிகள் மூலம், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சி நடக்கிறது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கம் என்று கூறினார்



  • Feb 06, 2025 12:16 IST

    இப்போராட்டம் அனைத்து மாணவர்களுக்குமானது - அகிலேஷ் யாதவ்

    இப்போராட்டம் அனைத்து மாணவர்களுக்குமானது என யு.ஜி.சி புதிய வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் தி.மு.க மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார் 



  • Feb 06, 2025 12:14 IST

    3 புலிகள் உயிரிழப்பு - வனத்துறை அதிர்ச்சி

    கேரள மாநிலம் வயநாடு அருகே 3 புலிகள் உயிரிழந்துள்ள நிலையில் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புலிகள் உயிரிழப்பு தற்செயலா?, யாரேனும் காரணமா? என புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Feb 06, 2025 11:52 IST

    திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பங்கேற்பு

    டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றுள்ளார்.



  • Feb 06, 2025 11:30 IST

    "குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்" - வைகோ

    "குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்" ஒன்றிய அரசின் யு.ஜி.சி வரைவு விதிகளை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.



  • Feb 06, 2025 10:51 IST

    உணவகம் தொடங்கிய பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்

    இமாச்சலப் பிரதேசத்தில் உணவகம் தொடங்கினார், கங்கனா ரனாவத். 'தி மவுன்டைன் ஸ்டோரி' (The Mountain Story) என்கிற தனது உணவகத்தை இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கினார், பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்



  • Feb 06, 2025 10:28 IST

    பள்ளி மாணவி வன்கொடுமை - எடப்பாடி அறிவிப்பு

    போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 



  • Feb 06, 2025 10:26 IST

    இந்தியர்களை கண்ணியக்குறைவாக நடத்திய அமெரிக்கா - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேள்வி நேரத்தை ஒத்துவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கை கால்களில் விலங்கு மாட்டி இண்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



  • Feb 06, 2025 10:23 IST

    கஞ்சாவை கண்டுபிடித்த மோப்ப நாய்

    தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த 7 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை மோப்பநாய் கண்டுபிடித்தது. 



  • Feb 06, 2025 09:43 IST

    ராஷ்டிரபதி பவனில் முதன்முறையாக திருமண விழா

    வரலாற்றில் முதன்முறையாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா நடக்க உள்ளது. குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படை அதிகாரி சி.ர்.பி.எஃப் துணை கமாண்டர் பூனம் குப்தாவிற்கும் சி.ர்.பி.எஃப் துணை கமாண்டர் அவினாஷ் குமாருக்கும் பிப்ரவரி 12 திருமணம் நடக்கிறது. பூனமின் அர்ப்பணிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 



  • Feb 06, 2025 09:27 IST

    வரி வசூல் செய்ய சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ. 5000 மேல் சொத்துவரி நிலைவையில் வைத்துள்ள 2 லட்சம் பேருக்கு கியூஆர் கோடு நோட்டீஸ் தர முடிவு செய்துள்ளது. கியூஆர் கோடு மூலம் நிலுவைடுல் உள்ள வரியை செலுத்தலாம். நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 



  • Feb 06, 2025 08:54 IST

    ஆட்டோவில் பாலியல் தொல்லை - இருவர் கைது

    கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் தயாளன் ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மூவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 



  • Feb 06, 2025 08:23 IST

    அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்

    அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை. குரல் பரிசோதனை முடிந்த பின் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்படும் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Feb 06, 2025 08:21 IST

    திருப்பதியில் ரூ.106 கோடி வருவாய்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 106 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.  20 மாதங்களுக்கும் மேலாக ஒவ்வொரு மாதமும் 100 கோடி வருவாய் ஈட்டப்படுவதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Feb 06, 2025 08:20 IST

    ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

    இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஹெச். ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை பழங்காநத்தத்தில் இருந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • Feb 06, 2025 08:16 IST

    வீராங்கனை திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை  தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கி பாராட்டினார்.



  • Feb 06, 2025 07:47 IST

    போலீசாரை முற்றுகையிட்ட ரசிகர்கள்

    சென்னை ரோகிணி திரையரங்கில் கையில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தடுத்து நிறுத்திய காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Feb 06, 2025 07:40 IST

    டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!

    யுசிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தி.மு.க மாணவரணி சார்பில் டெல்லியில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். 



  • Feb 06, 2025 07:37 IST

    மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

    மதுரை - சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Feb 06, 2025 07:36 IST

    பட்டாசு ஆலை வெடி விபத்து - விதிமீறல் கண்டுபிடிப்பு

    விருதுநகர் அருகே நேற்று வெடி விபத்து நடந்த சத்தியபிரபு பட்டாசு ஆலை, விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



  • Feb 06, 2025 07:34 IST

    இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒரேயோரு தொடர் என்பதால், வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன



  • Feb 06, 2025 07:27 IST

    முதலமைச்சர் நெல்லை பயணம்

    இரண்டு நாள் பயணமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை செல்கிறார். டாடா சோலார் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார்.



  • Feb 06, 2025 07:26 IST

    ஆளுநர் வழக்கு - இன்று விசாரணை

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: