/tamil-ie/media/media_files/uploads/2021/10/durai-vaiko-2.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 90.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 20, 2025 21:57 IST
சி.பி.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அறிவாலயத்தில் ஸ்டாலின் உடன் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திதார். அப்போது, சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம், மூத்த தலைவர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி மற்றும் தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு உடன் இருந்தனர்.
-
Apr 20, 2025 20:48 IST
துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம் - பெ. சண்முகம் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது.” தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநரின் செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் எனவும் அவரது அழைப்பை துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.
-
Apr 20, 2025 20:11 IST
கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் வாபஸ்
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் வாபஸ் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 33 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோரின் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
Apr 20, 2025 19:46 IST
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதமடித்த வெயில்; மக்கள் அவதி
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று மதுரை விமான நிலையம் 104 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம் 103 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் 103 டிகிரி ஃபாரன் ஹீட், ஈரோடு 103 டிகிரி ஃபாரன் ஹீட, திருச்சி 102 டிகிரி ஃபாரன் ஹீட், திருத்தணி 102 டிகிரி ஃபாரன் ஹீட், சென்னை மீனம்பாக்க 100 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
-
Apr 20, 2025 19:40 IST
சென்னையில் வியாசர்பாடி ரவுடி ராஜி என்கிற தொண்டை ராஜ் வெட்டிக் கொலை
சென்னையில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜி என்கிற தொண்டை ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதீயில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 20, 2025 17:43 IST
திருப்பதியில் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
தொடர் விடுமுறை காரணமாகவும், பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று 78,821 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,568 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.36 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் கிருஷ்ணா தேஜா தங்கும் விடுதி வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
-
Apr 20, 2025 17:27 IST
"இனி பிரச்னை வராது என இருவரும் உறுதியளித்தனர்”
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நிர்வாகக் குழு கூட்டத்தில் எல்லோரும் தங்கள் கருத்துகளை கூறினார்கள். துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசினார்கள். மதிமுகவுக்கும், துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார். இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
-
Apr 20, 2025 17:26 IST
”இந்தி திணிப்புக்கு எதிரான போரில் வெல்வோம்”
தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாக தொடர்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆதிக்க சக்திகளின் இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் முதலமைச்சர் என நம் தலைவர்கள் தலைமையில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம். இது வெறும் மொழிப் போராட்டமாக மட்டுமல்லாமல்; தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமாகவும் தொடர்கிறது. நூற்றாண்டு காணபோகும் இந்தித் திணிப்புக்கு எதிரான இந்தப் போரில் மக்கள் ஆதரவோடும், சட்டத்தின் துணைக்கொண்டும் நம் கழகத்தலைவர்,முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வென்று காட்டுவோம் என தெரிவித்துள்ளார் .
-
Apr 20, 2025 16:36 IST
ரூ.1,000 கோடி நன்கொடை; ரூ.35 லட்சம் பெற்று மோசடி
சென்னையில் தனியார் அறக்கட்டளைக்கு ரூ.1,000 கோடி நன்கொடை பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள பெண் உட்பட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். துபாய்க்கு வரவழைத்து ரூ.35 லட்சம் கமிஷன் தொகையை கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
-
Apr 20, 2025 16:20 IST
அமெரிக்கா சென்றடைந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
அமெரிக்கா சென்றடைந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து பேசுகிறார்.
-
Apr 20, 2025 16:08 IST
ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றார் துரை வைகோ. மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ கூறினார். துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற வைகோ அறிவுறுத்தி உள்ளார். மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து ராஜினாமா முடிவு வாபஸ் பெற்றார் துரை வைகோ. கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என துரை வைகோ, மல்லை சத்யா அறிவித்துள்ளனர்.
-
Apr 20, 2025 15:39 IST
துரை வைகோ ராஜினாமாவை திரும்பப்பெற உள்ளதாக தகவல்
ம.தி.மு.க நிர்வாகக்குழு கூட்டத்தில் துரை வைகோவை நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதாகவும், அதனைத்தொடர்ந்து அவர் ராஜினாமாவை திரும்பப்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
-
Apr 20, 2025 15:20 IST
அமித்ஷா செல்லும் இடமெல்லாம் பா.ஜ.க ஆட்சி - நயினார் நாகேந்திரன்
அமித்ஷா செல்லும் இடமெல்லாம் பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. இனி அடிக்கடி அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமையும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Apr 20, 2025 14:47 IST
கட்சியை விட்டு என்னை விலக்கி விடுங்கள் - மல்லை சத்யா
நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, கட்சியை விட்டு என்னை விலக்கி விடுங்கள். துரை வைகோ அரசியலுக்கு வர விரும்பியது நான். ம.தி.மு.க நலனுக்கு எதிராக செயல்படவில்லை. கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன் என மல்லை சத்யா கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Apr 20, 2025 14:13 IST
ம.தி.மு.க விவகாரம் அடுத்த வீட்டு பிரச்னை - அமைச்சர் சேகர் பாபு
எங்கள் முதல்வர் அடுத்த வீட்டு பிரச்சனைகள் குறித்து பேசக் கூடாது என சொல்லியிருக்கிறார். அதனால் ம.தி.மு.க.,வில் நடப்பதை பற்றி நான் கருத்து சொல்ல எதுவுமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
-
Apr 20, 2025 14:09 IST
துரை வைகோவுக்கு 40 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு
சென்னை, எழும்பூரில் நடைபெற்று வரும் ம.தி.மு.க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.,வில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
-
Apr 20, 2025 13:40 IST
சென்னை திருவொற்றியூரில் தெரு நாயை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்
சென்னை திருவொற்றியூரில் தெரு நாயை முதியவர் ஒருவர் கல்லால் அடித்துக் கொன்றார். தன்னார்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு நிலையில், முதியவர் தலைமறைவாகியுள்ளார்
-
Apr 20, 2025 13:20 IST
தி.மு.க-வை மட்டுமே நம்பி வி.சி.க இல்லை - திருமாவளவன்
தி.மு.க-வை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் எந்த முடிவையும் வி.சி.க-வால் எடுக்க முடியும் என்றும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 20, 2025 13:06 IST
தைரியம் இருந்தால் சட்டசபையில் பேச சொல்லுங்கள் - துரைமுருகன்
நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், "அ.தி.மு.க-விற்கு தைரியம் இருந்தால், நீட் தேர்வு குறித்து சட்டசபையில் பேச சொல்லுங்கள்" என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
Apr 20, 2025 12:19 IST
'முதன்மை செயலாளர் துரை வைகோ' எனக் குறிப்பிட்டு ம.தி.மு.க தீர்மான செய்தி
ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான செய்தியில், 'முதன்மை செயலாளர் துரை வைகோ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, அப்பதவில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிக்கை வெளியிட்டார்.
-
Apr 20, 2025 11:52 IST
துரை வைகோ விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது என நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்
துரை வைகோவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது என ம.தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 20, 2025 11:39 IST
ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - ம.தி.மு.க தீர்மானம்
ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்தும், அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் ம.தி.மு.க சார்பில் வரும் 26-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
Apr 20, 2025 11:08 IST
ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் தொடக்கம்
சென்னை, எழும்பூரில் உள்ள ம.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
Apr 20, 2025 10:18 IST
அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்
4 வழி மேம்பால பணிகள் நடப்பதால் இன்று முதல் ஏப்.22ம் வரை அண்ணாசாலையில் மாற்றம் ஏற்பட்டது. தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் வாகனங்கள் கோட்டூர்புரம் வழியாக திருப்பி விடப்படும். பின்னர் நந்தனம் வழியாக சைதாப்பேட்டை செல்ல ஏற்பாடு கோட்டூர்புரத்தில் இருந்து தேனாம்பேட்டை, அண்ணா சாலை வரும் வாகனங்கள் சேமியர்ஸ் ரோடு இடதுபுறம் திரும்பி நந்தனம் சிக்னல் அருகே வலதுபுறமாக திரும்பி அண்ணா சாலையை அடையலாம்.
-
Apr 20, 2025 10:17 IST
கட்சிக் கொடி இல்லாத காரில் வந்த துரை வைகோ
மதிமுக பொதுச்செயாலாளர் வைகோவின் மகன் துரை வைகோவின் காரில் கட்சிக் கொடி இல்லை. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த துரை வைகோ கட்சிக் கொடியை அகற்றினார்.
-
Apr 20, 2025 10:15 IST
மதிமுகவில் உள்ள அனைவருமே சேனாதிபதிதான் - துரை வைகோ
மதிமுகவில் மல்லை சத்யா மட்டுமல்ல; அனைவருமே சேனாதிபதிதான். மதிமுகவுக்காக வைக்கோவுக்காக உழைத்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பிறருக்கு வழங்கிய வாய்ப்பை விட மல்லை சத்யாவிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன என துரை வைகோ கூறுகிறார்.
-
Apr 20, 2025 09:05 IST
கஞ்சா ஹோம் டெலிவரி - தாய், மகன் கைது
சேலம் ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய், மகன் ஆகியோர் கைது செய்தனர். பூங்கொடி அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
-
Apr 20, 2025 09:04 IST
திமுக கூட்டணியில் பாமக?- முதல்வர் மறுப்பு
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக கூறும் செய்திகள் வதந்திகள் தான். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாகவுள்ளன. இந்த கூட்டணி மாறாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Apr 20, 2025 09:00 IST
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் - விஜய்
அன்பு,கருணை, மனித்நேயம், சகோதரத்துவ,தியாகம் ஆகியவற்றை போதித்தவர் இயேசு கிறிஸ்து. ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
Apr 20, 2025 08:59 IST
ஆளுநர் என்பவர் தபால்காரர்தான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் என்பவர் தபால்காரர்தன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக - பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக நான் கூறியது தற்போது நிரூபனமானது என்றும் தெரிவித்துள்ளார்.
-
Apr 20, 2025 08:17 IST
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து
டெல்லி முஸ்தாபா பாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கோர விபத்து நடந்ததில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு, 5 பேரின் நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 20, 2025 08:14 IST
வேற்று கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான அறிகுறி - இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு
கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன் கண்டறிந்துள்ளார்.
-
Apr 20, 2025 07:40 IST
சின்னத்துரை மீது தாக்குதல் - இருவர் கைது
நெல்லை நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்டாகிராம் மூலம் சின்னத்துரையிடம் நட்பாக பழகி பணம் பறிக்கும் நோக்கத்தோடு வரவழைத்து தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் சங்கரநாராயணன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் மீதமுள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். சின்னத்துரை வழக்கில் பரமேஷ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Apr 20, 2025 07:37 IST
அதிமுக சார்பில் அஞ்சலி
நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
Apr 20, 2025 07:37 IST
26 ரஃபேல் விமானங்களை இறக்கும் இந்தியா
பிரான்ஸிடம் ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பில் கடற்படைக்கான 26 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா வரும் நிலையில், ஏப்ரல் 28ம் தேதி இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
-
Apr 20, 2025 07:35 IST
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இயேசு உயிர்த்தெழுந்த தத்ரூபமான காட்சிகள் கலையரங்கில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈஸ்டர் பெருவிழாவில் வழிபாடு நடத்தினர்.
-
Apr 20, 2025 07:33 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 90.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.