Chennai News Highlights: 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் ஜெகதீப் தன்கர்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vikram Misri

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை சவுதி அரேபியா  பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார். பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஸ்ரீநகருக்கு வந்தார். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் ஷா அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். 

தற்போதைய நிலவரம் என்ன? காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. மாநிலம் முழுதும் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆள் நடமாட்டமின்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Apr 23, 2025 23:40 IST

    3 நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் ஜெகதீப் தன்கர்

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர இருக்கிறார். உதகையில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அவர் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, 26-ஆம் தேதி தோடர் கோயிலுக்கு அவர் செல்கிறார். 27-ஆம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் அவர் உரையாற்றுகிறார்.



  • Apr 23, 2025 21:36 IST

    பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

    பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு மே 1-ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 23, 2025 21:24 IST

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் - விக்ரம் மிஸ்ரி

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1-ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லையும் தற்போது மூடப்படுகிறது. மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Apr 23, 2025 21:08 IST

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் - டி.ஆர்.பி. ராஜா

    2024 - 25 ஆம் நிதியாண்டில் 1.25 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளதாக, தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



  • Apr 23, 2025 20:16 IST

    இ.பி.எஸ் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

    அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக விருந்து அளிக்கப்பட்டது. இதனை, அக்கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



  • Apr 23, 2025 20:08 IST

    பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து சுப்ரீம் கோர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

    ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  • Apr 23, 2025 19:53 IST

    நவீன இரும்பு மனிதரை பதவி விலக சொல்வதா?; திருமாவளவனுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

    காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியதற்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Apr 23, 2025 19:51 IST

    முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு - டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

    தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: “உலக நாடுகளுக்கான பிரெஞ்சு கார்களை வடிவமைக்கும் நகரம் என்ற புதிய பெருமையைப் பெற்றுள்ளது. நம்ம சென்னை ரெனால்ட் நிறுவனம், பிரான்சுக்கு வெளியே தங்களது மிகப்பெரிய வடிவமைப்புக் கூடத்தை தற்போது சென்னையில் திறந்துள்ளது” என்று் கூறினார். 



  • Apr 23, 2025 19:44 IST

    ஏப்.25 முதல் கோடை விடுமுறை; ஜூன் 2-ம் தேதி மீண்டும் வகுப்புகள் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை

    தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை கடைசி தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.



  • Apr 23, 2025 18:48 IST

    தேசப் பாதுகாப்பில் அரசியல் செய்கிறது இந்தியா கூட்டணி - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: “தேசப் பாதுகாப்பில் இந்தியா கூட்டணி கட்சிகள் அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது; அரசுக்கு துணை நிற்காமல் எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் போக்கினை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்; எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும், உள்ளூர் பயங்கரவாதமாக இருந்தாலும், பாஜக அரசு வேரறுக்கும்” என்று கூறினார்.



  • Apr 23, 2025 18:46 IST

    சங்ககிரியில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - எஸ்.எஸ். சிவசங்கர்

    மாநிலத்தில் திறமையான ஓட்டுநர்களை உருவாக்கும் முக்கிய நோக்கத்துடன் சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில் உள்ள தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும். இதன் மதிப்பீடு ரூ.1725.00 லட்சம் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.



  • Apr 23, 2025 18:43 IST

    காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் விவகாரம்: மோடி இல்லத்தில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை கூட்டம் 

    காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் விவகாரம் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது . காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முப்படை தளபதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.



  • Apr 23, 2025 17:17 IST

    நைட்ரஜன் காற்று நிரப்பும் இயந்திரங்கள்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 100 பேருந்து பணிமனைகளில் நைட்ரஜன் காற்று நிரப்பும் இயந்திரங்களை அமைத்து பராமரிப்பை மேம்படுத்தப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.



  • Apr 23, 2025 17:16 IST

    செந்தில் பாலாஜி அமைச்சராகி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க முற்படுகிறார் என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய இரு நாள்களுக்குள் அமைச்சராகி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அமைச்சராக இல்லை என்பதாலே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவதை பரிசீலித்தோம். அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஜாமின் கோரினால் நீதிமன்றங்கள் என்ன முடிவு எடுக்கும் என  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • Apr 23, 2025 17:14 IST

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.  விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள். குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் பயங்கரவாத‌த்திற்கு எதிராக பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.



  • Apr 23, 2025 17:11 IST

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: காயமடைந்தவர்களுக்கு அமித்ஷா ஆறுதல்

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து  ஆறுதல் கூறியுள்ளார்.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • Apr 23, 2025 16:26 IST

    காஷ்மீர் தாக்குதல் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி: சீமான் கருத்து

    காஷ்மீரியில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்,  பலர் படுகாயமடைந்த நிலையில், இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்றும், இது ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி என்றும் சீமான் கூறியுள்ளார். நம் நாட்டில் உள்துறை அமைச்சகம் இருக்கிறதா? அது செயல்படுகிறதா என்பது குறித்து, கேள்வி எழுப்பும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் செயலிழந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.



  • Apr 23, 2025 16:17 IST

    100 பணிமனைகளில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர்

    பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒப்பனை அறைகள் 100 பணிமனைகளில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.



  • Apr 23, 2025 16:02 IST

    6 பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    சென்னையில் முகப்பேர் ( கிழக்கு), எம்.எம்.டி.ஏ.காலனி, திருவேற்காடு, பெசன்ட் நகர் மற்றும் கண்ணகி நகர் ஆகிய 6 பேருந்து முனையங்கள் பல்வேறு வசதிகளுடன் ரூ.7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

    -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்



  • Apr 23, 2025 15:38 IST

    ஊதிய ஒப்பந்தம்- முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

    ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்



  • Apr 23, 2025 15:16 IST

    காவலர்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

    மதுரை ஆஸ்டின்பட்டி காவல் நிலைய காவலர் செந்தில் குமார், காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் 2021ம் ஆண்டு அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு
    "காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன பிரச்னை?. வார விடுப்பு வழங்கத் தவறினால், காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்"
    - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை



  • Apr 23, 2025 14:58 IST

    பிரதமர் மோடியின் உத்தரபிரதேச பயணம் ரத்து

    நாளை உத்தரப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது



  • Apr 23, 2025 14:26 IST

    அமித்ஷா பதவி விலக வேண்டும்- திருமாவளவன்

    அமித்ஷா பதவி விலக வேண்டும்- திருமாவளவன்

    காஷ்மீரில் நடந்துள்ள கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.

    - திருமாவளவன்



  • Apr 23, 2025 14:26 IST

    அன்புமணி மீதான வழக்கு ரத்து

    என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Apr 23, 2025 14:10 IST

    பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதியில் அமித்ஷா ஆய்வு

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா



  • Apr 23, 2025 13:48 IST

    சொத்துகுவிப்பு வழக்கு: துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

    சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரை முருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களில் வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு



  • Apr 23, 2025 13:42 IST

    "மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது"

    தமிழக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது என்றார். மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது என்று பதில் அளித்தார்.



  • Apr 23, 2025 13:30 IST

    ”அதிகாரப் போட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தவில்லை”

    கல்வி வளர்ச்சி, கல்விக்கான திட்டமிடுதல் போன்றவற்றிற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும், இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டோம் என்றும், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை இந்த மாநாட்டுடன் முடிச்சு போட்டு தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்றும் கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. 

     



  • Apr 23, 2025 13:02 IST

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - NIA விசாரணை

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். என்.ஐ.ஏ அதிகாரிகள், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு உதவுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 23, 2025 12:58 IST

    காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

    காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.



  • Apr 23, 2025 12:47 IST

    உளவுத்துறையின் தோல்வி - திருமாவளவன் குற்றச்சாட்டு

    “பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையே இந்த விளைவுகளை உருவாக்கி உள்ளதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். உளவுத்துறையின் தோல்வி என்பதால் இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் திருமா கேட்டுக் கொண்டார்.



  • Apr 23, 2025 12:33 IST

    பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு லஷ்கர் - ஏ - தொய்பாவின் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி மூளையாகச் செயல்பட்டதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Apr 23, 2025 12:02 IST

    ”பஹல்காம் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இல்லை”

    காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும், இருவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும்,பாதிக்கப்பட்டோருடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Apr 23, 2025 11:54 IST

    பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்

    உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி என்று  ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி; பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தெரிவித்துள்ளது. 



  • Apr 23, 2025 11:53 IST

    தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியீடு

    தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியீடு. 3 பேரின் வரையப்பட்ட படங்களை வெளியிட்ட ஜம்மு - காஷ்மீர் காவல்துறை; அஷிஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்; மொத்தம் 6 பேர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், 3பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளன



  • Apr 23, 2025 11:48 IST

    பஹல்காம் தாக்குதல் - ஐபிஎல் போட்டியில் மௌன அஞ்சலி

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கருப்பு நிற பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்பர்; போட்டியின்போது கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறாது; பட்டாசுகள் வெடிக்கவும் தடை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 



  • Apr 23, 2025 11:35 IST

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு முதல்வர் கண்டனம்

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க ஐஏஎஸ் அதிகாரி அப்தாக் ரசூல் அனுப்பி வைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் உயிரிழப்பு



  • Apr 23, 2025 11:32 IST

    காஷ்மீர் தாக்குதல் - பேரவையில் அஞ்சலி

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்தனர். 



  • Apr 23, 2025 11:17 IST

    நண்பகல் 12 மணிக்கு கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை.

    காஷ்மீர்: பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை. பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெயசங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.



  • Apr 23, 2025 11:16 IST

    கிளாம்பாக்கம் வரை மெட்ரோ - தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி. ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதிக்கு பிறகு இந்த வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 23, 2025 11:14 IST

    ED சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி

    அமலாக்கத் துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை சட்டவிரோதம் இல்லை எனக்கூறி, டாஸ்மாக் நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்



  • Apr 23, 2025 11:13 IST

    பஹல்காம் தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இரங்கல்
    பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது; சுற்றுலா பயணிகள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; பயங்கரவாத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Apr 23, 2025 10:47 IST

    ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல்

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல் விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தல்; ஸ்ரீநகருக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது. 



  • Apr 23, 2025 10:44 IST

    "காஷ்மீர் தாக்குதல் - தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை"

    "காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 3 பேர் காயம் அடைந்த நிலையில் 2 பேரின் உடல் நிலை சீராக உள்ளது, ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளனர்" என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 



  • Apr 23, 2025 10:35 IST

    அமித் ஷா அஞ்சலி

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்தித்தார்.



  • Apr 23, 2025 10:29 IST

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக வழக்கு

    காஷ்மீரில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு. நேற்று பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 



  • Apr 23, 2025 10:21 IST

    தங்கம் விலை ரூ.2,200 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 



  • Apr 23, 2025 10:11 IST

    "பஹல்காம் தாக்குதலுக்கு எங்களுக்கும் தொடர்பில்லை"

    பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எந்த வடிவத்திலும், எந்த இடத்திலும் பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பது இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். 



  • Apr 23, 2025 10:02 IST

    காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

    ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளது. பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



  • Apr 23, 2025 09:44 IST

    12 சைபர் குற்றவாளிகளை அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்த போலீசார்

    ஆன்லைன் முதலீட்டு மோசடி உதவித்தொகை மோசடி, டிஜிட்டல் அரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 12 பேர்ரை அடுத்தடுத்து அதிரடியாக சைபர் குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.



news updates Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: