Chennai News Updates: பஹல்காம் தாக்குதல்; வாகா எல்லையில் கதவு திறக்காமல் நடந்த கொடியிறக்கம்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaha m

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த முக்கிய நடவடிக்கைகள்:

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். சுற்றுலா விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்.

Advertisment
Advertisements

சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை. மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Apr 24, 2025 23:39 IST

    வாகா எல்லையில் கதவு திறக்காமல் நடந்த கொடியிறக்கம் நிகழ்வு

     பஞ்சாப்: அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் எல்லைக்கதவு திறக்காமல், கைகுலுக்கல் இல்லாமல் நடந்த கொடியிறக்கம் நிகழ்வு. வழக்கமாக எல்லைக்கதவுகள் திறக்கப்பட்டு, இருநாட்டு வீரர்களும் கைக்குலுக்கி கொடிகளை இறக்குவார்கள். 



  • Apr 24, 2025 21:08 IST

    நாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி

    பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் நாளை காஷ்மீர் செல்கிறார்



  • Apr 24, 2025 21:07 IST

    பஹல்காம் தாக்குதல்; மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில்  நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில், அனைவரும் ஒருமனதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு எடுக்கும் அனைத்து  நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி முழு ஆதரவு தரும்  என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.



  • Apr 24, 2025 20:15 IST

    பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஆறுதல்

    பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். பரமேஸ்வரன் மனைவியிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி



  • Apr 24, 2025 20:14 IST

    டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அமலாக்கத்துறை சம்மன்

    டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அமலாக்கத்துறை சம்மன். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் சம்மன். டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் 



  • Apr 24, 2025 20:13 IST

    சட்டவிரோதமாக கருக்கலைப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

    சென்னை கேளம்பாக்கம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.  சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நிலை 
    பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



  • Apr 24, 2025 19:19 IST

    பஹல்காம் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

    பஹல்காம் தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடி உடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 
    பிரதமர் மோடியிடம் கண்டனம் தெரிவித்தார் இந்திய மக்களுடனும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் இஸ்ரேல் துணை நிற்பதாக தெரிவித்தார்



  • Apr 24, 2025 18:31 IST

    பஹல்காம் தாக்குதல்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது; அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்பு

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது; நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க, டி.எம்.சி, உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 24, 2025 18:27 IST

    எல்லை தாண்டியதால் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் பிடிபட்ட பி.எஸ்.எஃப் வீரர்; விடுவிக்க பேச்சுவார்த்தை

    பஞ்சாப் எல்லையைத் தவறுதலாகக் கடந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் பிடித்து வைத்துள்ளனர். அவரது விடுதலையைப் பெறுவதற்காக இரு படைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

    182வது பட்டாலியனைச் சேர்ந்த ஒரு காவலரை புதன்கிழமை ஃபெரோஸ்பூர் எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்ததாக அவர்கள் கூறினர்.

    அந்த வீரர் சீருடையில் இருந்தார் மற்றும் தனது சர்வீஸ் துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் விவசாயிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, நிழலில் ஓய்வெடுக்கச் சென்றபோது ரேஞ்சர்களால் பிடிக்கப்பட்டார்.



  • Apr 24, 2025 18:26 IST

    பஹல்காம் தாக்குல்: பாகிஸ்தானுக்கு வந்த அழைப்புகள்; பஞ்சாப் எல்லை மாவட்ட ஹோட்டல்களில் என்.ஐ.ஏ சோதனை

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) குழுக்கள் பஞ்சாபின் பல்வேறு ஹோட்டல்களில், குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் ஃபெரோஸ்பூரில் சோதனை நடத்தின.

    தகவல்களின்படி, என்ஐஏ குழுக்கள் அதிகாலை 4 மணியளவில் ஹோட்டல் வளாகங்களுக்கு வந்து, சுமார் ஐந்து மணி நேரம் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. பாகிஸ்தானில் உள்ள தொலைபேசி எண்களுக்கு வந்த அழைப்புகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    ஃபெரோஸ்பூரில், தாஜ் ஹோட்டல், சிட்டி ரிசார்ட் மற்றும் இந்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அமிர்தசரஸில் ஐந்து ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின்போது, என்ஐஏ குழுக்கள் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.



  • Apr 24, 2025 17:42 IST

    ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து சீனா மற்றும் கனடா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் (MEA) வியாழக்கிழமை விளக்கம் அளித்தது. இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Apr 24, 2025 17:36 IST

    காஷ்மீர் செல்லாமல் மோடி பீகாரில் பரப்புரை செய்வது அதிர்ச்சி தருகிறது - திருமாவளவன்

    வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி.: “காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்திர்கு பிரதமர் மோடி செல்லவில்லை; காஷ்மீரில் தாக்குதல் நடந்த நிலையில், மோடி காஷ்மீர் செல்லாமல் பீகாரில் பரப்புரை செய்து வருவது அதிர்ச்சி தருகிறது. காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



  • Apr 24, 2025 17:27 IST

    காஷ்மீர் தாக்குதலைப் பரப்புரைக்கு பயன்படுத்துகிறார்கள் - திருமாவளவன்

    வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி.: “காஷ்மீர் தாக்குதலைப் பரப்புரைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது கசப்பளிக்கிறது; காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்; அரசியலுக்காக இதை வலியுறுத்தவில்லை; நாட்டின் பாதுகாப்பு கருதி சொன்னேன்” என்று கூறினார்.



  • Apr 24, 2025 17:23 IST

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யாசிங் தாக்கூருக்கு மரண தண்டனை விதிக்க என்.ஐ.ஏ வாதம்

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாசிங் தாக்கூருக்கு மரண தண்டனை விதிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ எழுத்துப்பூர்வமான வாதம் சமர்ப்பித்துள்ளது.



  • Apr 24, 2025 17:20 IST

    சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்

    சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது; சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. போரை நிறுத்தும் வகையில், 1972-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது; சிந்து நதி நீரை நிறுத்துவது போருக்கு நிகரானது என பாகிஸ்தான் கூறிய நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.



  • Apr 24, 2025 17:16 IST

    பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பிரதமர் மோடியின் செய்தி என்ன?

    பீகார் மாநிலத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மதுபானியில் ஆற்றிய உரையின் நடுவே, ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் "ஆதரவாளர்கள்" மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பதற்காக உடனடியாக ஆங்கிலத்தில் பேசினார்.

    பெரும்பாலும் மாநிலத்தை மையமாகக் கொண்ட உரையில் பிரதமர் ஆங்கிலத்திற்கு மாறியது, அரசாங்கம் "ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்டுபிடித்து, தண்டிக்கும்" என்று உறுதியளித்து, இந்த துக்க நேரத்தில் இந்தியாவுடன் துணை நின்ற அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து, உலகிற்கு செய்தி அனுப்புவதற்காகவே இருந்தது.



  • Apr 24, 2025 17:14 IST

    'காலை 10 மணிக்குள் வெளியேறுங்கள்': உத்தரகாண்டில் காஷ்மீரிகளுக்கு எதிரான மிரட்டல்; காவல்துறை தலையீடு

    காஷ்மீரி முஸ்லிம்கள் உத்தரகாண்டிலிருந்து புதன்கிழமை வெளியேற வேண்டும் என்று இந்து ரக்ஷா தளம் மிரட்டல் விடுத்த வீடியோவைத் தொடர்ந்து, டேராடூன் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும், சமூக ஊடகங்களிலிருந்து 25 "தூண்டும் பதிவுகளை" நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் இந்து ரக்ஷா தளத் தலைவர் லலித் சர்மா கூறுகிறார்:  “பஹல்காமில் நடந்த சம்பவம் எங்களை காயப்படுத்தியுள்ளது. நாளை காலை 10 மணிக்குப் பிறகு மாநிலத்தில் எந்த காஷ்மீரி முஸ்லிமையும் நாங்கள் பார்த்தால், அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம். நாளை, எங்கள் தொண்டர்கள் அனைவரும் காஷ்மீரி முஸ்லிம்களுக்கு இந்த பாடத்தை புகட்ட தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவார்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். காஷ்மீரி முஸ்லிம்களே, காலை 10 மணிக்குள் வெளியேறுங்கள், இல்லையென்றால் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத நடவடிக்கையை எதிர்கொள்வீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.



  • Apr 24, 2025 16:53 IST

    இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் - பாகிஸ்தான் எச்சரிக்கை

    இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும் என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளது



  • Apr 24, 2025 16:52 IST

    சிந்து நதிநீர் எங்களுக்கே சொந்தம் - பாகிஸ்தான் அமைச்சர்

    சிந்து நதியின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களுக்கே சொந்தம் என பாகிஸ்தான் அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்



  • Apr 24, 2025 16:24 IST

    இந்தியர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தல்

    பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது. மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா வரும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லும். இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது



  • Apr 24, 2025 16:21 IST

    கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16-ல் திறப்பு

    தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் விடுமுறைக்குப் பிறகு ஜூன் 16-ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்



  • Apr 24, 2025 16:16 IST

    பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம் - புதிய ஆணை

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது



  • Apr 24, 2025 15:51 IST

    எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு: இடைக்கால தடை

    எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    மேலும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளித்து நீதிமன்றம் ஆணை.

    தனக்கெதிராக முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலகளிக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல்



  • Apr 24, 2025 15:22 IST

    பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் தமிழக காவல்துறை

    மருத்துவ சிகிச்சை மற்றும் தொழில் ரீதியாக தமிழ்நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் காவல்துறை - நாளைக்குள் வெளியேற்ற நடவடிக்கை



  • Apr 24, 2025 14:59 IST

    திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

    திருநெல்வேலி - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 12ல் இருந்து 16 ஆக உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு

    மதுரையில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியானது.



  • Apr 24, 2025 14:42 IST

    ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு

    செங்கல்பட்டு பொழிச்சலூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஊராட்சிமன்றத் துணைத்தலைவரின் மனைவி டெய்சி ராணி பெசன்ட்நகரில் சடலமாக மீட்பு



  • Apr 24, 2025 14:15 IST

    நீலகிரியில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    நீலகிரியில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் ஆளுநர் ரவியை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ரவி நடத்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.



  • Apr 24, 2025 14:14 IST

    தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • Apr 24, 2025 13:39 IST

    கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை - பிரதமர் மோடி சூளுரை

    காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது; பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம் - பீகாரில் பிரதமர் மோடி சூளுரை



  • Apr 24, 2025 13:21 IST

    பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு-நோட்டீஸ்

    பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு; சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு பதிவாகியுள்ளது. 



  • Apr 24, 2025 13:19 IST

    சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் கட்டப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்காக சென்னையில் ரூ.40 கோடி மதிப்பில் பயிற்சி மையம் கட்டப்படும்; 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் ஷெனாய் நகரில் பயிற்சி மையம் கட்டப்படும் நான் முதல்வன் திட்டத்தில் படித்து யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நாளை மறுநாள் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Apr 24, 2025 13:18 IST

    மற்றொரு வழக்கிலும் துரை முருகன் விடுவிப்பு ரத்து

    அமைச்சர் துரைமுருகனை விடுவித்த மற்றொரு வழக்கிலும் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். ரூ.1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரை முருகன், அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து; ரூ.3.92 கோடி சொத்து குவிப்பு என்ற வழக்கில் விடுவித்ததை நேற்று ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம்



  • Apr 24, 2025 13:01 IST

    மயோனைஸுக்கு தமிழ்நாட்டில் ஓராண்டு தடை

    முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு. மயோனைஸை உண்பதனால், இரைப்பைக் குடல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 24, 2025 12:50 IST

    எடப்பாடி பழனிசாமியை வணங்கி செங்கோட்டையன் உரை

    சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியை வணங்கி உரையை தொடங்குவதாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நேற்று ஏற்பாடு செய்த விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், இன்று செங்கோட்டையன் புகழாரம்



  • Apr 24, 2025 12:17 IST

    சுற்றுலாப் பயணிகளை தாக்கிய அதிர்ச்சி காட்சி

    ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. புல் தரையில் சுற்றுலாப் பயணிகளை அமர வைத்து துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள்; வெடிகுண்டு... வெடிகுண்டு... என கூறியவாறு தமிழக சுற்றுலாப் பயணிகள் அலறிய காட்சிகளும் வெளியானது



  • Apr 24, 2025 11:45 IST

    யுபிஎஸ்சி தேர்வில் வென்றவர்களுக்கு கம்பராமாயணம் பரிசு!

    யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து கம்ப ராமாயணம் புத்தகத்தை பரிசாக ஆளுநர் வழங்கினார்.



  • Apr 24, 2025 11:43 IST

    பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்

    டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றியது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Apr 24, 2025 11:42 IST

    ஏவுகணை சோதனை நடத்தும் பாகிஸ்தான்?

    கராச்சி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்த உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கராச்சி கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை சோதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 24, 2025 11:28 IST

    ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் மனைவி பிரியாவிடை..

    பகல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரிக்கு சல்யூட் அடித்து, ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் மனைவி உணர்ச்சி பொங்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சொந்த ஊரான் அரியானா மாநிலம் கர்ணலில் கடற்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.



  • Apr 24, 2025 11:26 IST

    தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர் பலி

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் உயிரிழப்பு. உதாம்பூர் மாவட்டம் பாசன்கார்க் பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Apr 24, 2025 11:02 IST

    தாய்நாடு திரும்பும் பாக். நாட்டவர்கள்

    இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டினர் மீண்டும் தாயகத்திற்கு புறப்பட்டனர். பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக விசாக்கள் ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் சென்றனர்.



  • Apr 24, 2025 11:00 IST

    கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு

    இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



  • Apr 24, 2025 11:00 IST

    பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

    பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Apr 24, 2025 10:33 IST

    தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 24, 2025 10:32 IST

    காஷ்மீர் செல்பவர்களுக்கு அமெரிக்க எச்சரிக்கை

    ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்க மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது. 



  • Apr 24, 2025 10:14 IST

    டெல்லிக்கு அழைத்து வரப்படும் பரமேஸ்வர்

    ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரை டெல்லிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



  • Apr 24, 2025 10:11 IST

    உயிரிழந்த அதிகாரியின் கடைசி வீடியோ

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழப்பதற்கு முன் மனைவியுடன் ரீல்ஸ் செய்த கப்பற்படை அதிகாரியின் வீடியோ வெளியாகி உள்ளது. 



  • Apr 24, 2025 10:10 IST

    காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்

    காஷ்மீரில் இருந்து சென்னைக்கு 2ஆம் கட்டமாக 50 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். 



  • Apr 24, 2025 09:15 IST

    பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் உடனடியாக வெளியேறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.



  • Apr 24, 2025 09:06 IST

    கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் அமைப்புகொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையிடம் கவுதம் கம்பீர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.



Tamilnadu News Latest Tamilnadu News Update Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: