/tamil-ie/media/media_files/uploads/2023/03/saa.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலா தலங்கள் மூடல்; தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Apr 29, 2025 22:15 IST
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் - ஷாலினி பெருமிதம்
டெல்லியில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய நடிகை ஷாலினி ஜனாதிபதி மாளிகையில் விருது வாங்கியதை பார்க்கும் போது மிகுந்த சந்தோசமாக பெருமையாக இருந்தது என அஜித் குறித்து பெருமிதம் பேசியுள்ளார்.
-
Apr 29, 2025 21:27 IST
15 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இளைஞரை அடித்துக் கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகம் ஆடிய நிலையில், பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவர 15 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 29, 2025 20:59 IST
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, பி.ஆர்.கவாய் நியமனம்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, பி.ஆர்.கவாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மே 14-ந் தேதி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 29, 2025 19:48 IST
2026 சட்டசபை தேர்தல்: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் நம்பிக்கை
கொளத்தூர் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டசபை தேர்தல் குறித்து கேள்விக்கு, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
Apr 29, 2025 19:23 IST
ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட சங்கம் வழக்கு
ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. படப்பிடிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்த வழக்கில் ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
-
Apr 29, 2025 18:20 IST
பஹல்காம் தாக்குதல்: மோடி அவசர ஆலோசனை; ராஜ்நாத் சிங், அஜித் தோவல் பங்கேற்பு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
Apr 29, 2025 17:40 IST
கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் வெற்றி
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். ஒக்வில்லே கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி வாகை சூடினார். ஆளும் லிபரல் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அனிதா ஆனந்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 29, 2025 17:32 IST
‘இம்சை அரசன் போல உளறிக் கொட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி’ -ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “அ.தி.மு.க தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது என சொல்லியிருக்கிறார் பழனிசாமி, சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அ.தி.மு.க தோற்றது? இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல உளறிக் கொட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
Apr 29, 2025 17:28 IST
தாய் கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்த் விடுதலை - மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பு
சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் விடுதலை செய்தது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம். தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டார்.
சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Apr 29, 2025 17:10 IST
த.வெ.க கொடியில் யானைச் சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு; ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்துக்கு தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் டொடர்ந்த வழக்கு விசரணையை சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
Apr 29, 2025 16:30 IST
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் விடுமுறை
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு
நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்
நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பார்கள்
இதே போல மதுரைக் கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூர்ணிமா ஆகியோர் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம்
-
Apr 29, 2025 16:15 IST
ரூ.50 லட்சம் நிவாரண நிதி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி
-மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவிப்பு
-
Apr 29, 2025 15:48 IST
தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 29) வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
Apr 29, 2025 15:24 IST
ஆன்லைன் ரம்மி கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் ஒத்திவைத்தனர்.
-
Apr 29, 2025 15:02 IST
டிரேடிங் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை, அண்ணா சாலையில் தனியார் டிரேடிங் நிறுவனத்தை முற்றுகையிட்டு முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு லட்ச ரூபாய்க்கு 5 முதல் 10 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றியதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
-
Apr 29, 2025 14:36 IST
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் படிப்பகம்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அயலகத் தமிழர் நலன் துறையினர் அமைச்சர் நாசர் வெளியிட்டார்.
-
Apr 29, 2025 14:12 IST
கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றம்
பணத்தை கடனாக வழங்கும் நிறுவனங்கள், கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கும் புதியை மசோதா சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 29) நிறைவேற்றப்பட்டது.
-
Apr 29, 2025 13:56 IST
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் பேச்சு. அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்த நயினார் நாகேந்திரன் மோடியையும் சந்தித்துள்ளார்.
-
Apr 29, 2025 13:47 IST
"2026-ல் ஒரே வெர்ஷன்தான்” - இபிஎஸ்
"Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure; இதில் இன்று Version 2.0 Loading ஆம். 2026-ல் ஒரே version-தான். அது அதிமுக version-தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு ByeByeStalin என சொல்லிவிடுவார்கள்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Apr 29, 2025 13:28 IST
"காலை உணவு திட்டம் விரிவாக்கம்"
"சிறுபான்மையினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
-
Apr 29, 2025 13:09 IST
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் ரஜினி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் சென்ற ரஜினிகாந்த் எஸ்.பி.வேலுமணி மகன் விஜய் விகாஸ் தீக்ஷனா தம்பதிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி மகனுக்கு மார்ச் மாதம் திருமணம் நடந்த நிலையில் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Apr 29, 2025 12:47 IST
ஏரியில் மூழ்கி 9 வயது பள்ளி சிறுவன் உயிரிழப்பு
செங்கல்பட்டில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுவன் ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்துள்ளார். சிறுவனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
-
Apr 29, 2025 12:40 IST
அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
-
Apr 29, 2025 12:04 IST
“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” - திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன்
3ஆவது குழந்தையை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும். மக்கள்தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பாதிக்கப்படுகிறது என்று திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன் கூறியுள்ளார்.
-
Apr 29, 2025 11:27 IST
ஆன்லைன் ரம்மி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்! தமிழ்நாடு அரசின் விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7, ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல். எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு!
-
Apr 29, 2025 11:25 IST
"இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல.. இது தமிழ்நாடு"
ட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல; இது தமிழ்நாடு மறந்துவிடாதீர்கள். உத்தரப்பிரதேச மாநில கும்பமேளாவில் நடைபெற்றது போன்று இங்கு உயிரிழப்புகள் நடைபெறவில்லை” என்று கூறினார்.
-
Apr 29, 2025 10:47 IST
”செப்.6 இனி காவலர் நாளாக கொண்டாடப்படும்”
செப்டம்பர் 6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
-
Apr 29, 2025 10:44 IST
”மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி..”
மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி.. ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் கவர்னர்.. நிதி என்று எல்லா தடைகளை தாண்டி செய்த சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
Apr 29, 2025 10:39 IST
காலனி என்ற சொல் நீக்கப்படும் - ஸ்டாலின் உறுதி
ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
-
Apr 29, 2025 10:24 IST
பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கருண் மரணம்
மலையாள திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் ஷாஜி நீலகண்டன் கருணாகரன்.இவர் இயக்கிய 'பிறவி, வானபிரஸ்தம், குட்டி ஸ்ராங்க்' ஆகிய திரைப்படங்களுக்கு 3 தேசிய விருதினை பெற்றவர். பல்வேறு சாதனைகள் படைத்து மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ஷாஜி கருண் (வயது 73), புற்றுநோய் பாதிப்பால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.
-
Apr 29, 2025 10:03 IST
பெண்கள் பாதுகாப்பு - 24 மணி நேர ரோபோட்டிக் காப்
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்’ என்ற புதிய சாதனத்தை மாநகர காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரோபோட்டிக் காப் சாதனத்தை சென்னையில் 200 இடங்களில் 2025 ஜூன் மாதம் முதல் பொருத்தப்பட உள்ளன.
-
Apr 29, 2025 10:01 IST
காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Apr 29, 2025 09:58 IST
துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல்
உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.
-
Apr 29, 2025 09:55 IST
மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: முதல்வர்
தமிழகத்தில் 7 ஆவது முறையாக மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என நம்பிக்கை உள்ளது. ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என கலைஞர் கருணாநிதி பாரட்டினார். கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை சாதனை என பாராட்டியிருப்பார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Apr 29, 2025 09:23 IST
தமிழ் வார விழா கொண்டாட்டம்
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் (ஏப்ரல் 29) தமிழ் வார விழா கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், மே 5-ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.
-
Apr 29, 2025 09:13 IST
சட்டப்பேரவை இறுதிநாள்
சட்டப்பேரவை இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
-
Apr 29, 2025 08:50 IST
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ என தகவல்
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ பாக். ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்எஸ்ஜி சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Apr 29, 2025 08:46 IST
தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும். மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம், மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
Apr 29, 2025 08:21 IST
ரோபோட்டிக் காப்
சென்னையில் களமிறங்கும் "ரோபோட்டிக் காப்". பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்க கூடிய ரோபோட்டிக் காப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
Apr 29, 2025 08:19 IST
கனடா நாடாளுமன்ற தேர்தல்
கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், இன்று இரவு முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 29, 2025 08:18 IST
பட்டாசு வெடி விபத்து இழப்பீடு வழங்க கோரிக்கை
கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழா வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Apr 29, 2025 07:51 IST
மயோனஸ் பறிமுதல்
புதுக்கோட்டையில் உணவு விடுதி மற்றும் சாலையோர கடைகளில், தடை செய்யப்பட்ட மயோனைஸை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
-
Apr 29, 2025 07:50 IST
புனேவில் விமான நிலைய ஓடுபாதையில் சிறுத்தை
புனேவில் விமான நிலைய ஓடுபாதையில் சிறுத்தை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையிடம் சிக்காமல் தப்பித்த நிலையில், கூண்டு வைத்து பிடிக்க முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 29, 2025 07:48 IST
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் நிதானம் தேவை - சீனா
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஆதரவு அளித்து வரவேற்போம் என சீனா வலியுறுத்தியுள்ளது.
-
Apr 29, 2025 07:11 IST
புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் மாநாடு மே 7ல் துவக்கம்
புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7ம் தேதி துவங்குகிறது. ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் கல்லூரி ஒப்புக் கொண்டதாக வாடிகன் அறிவித்துள்ளது.
-
Apr 29, 2025 07:10 IST
சென்னை - நடுவானில் விமானத்தில் கோளாறு
தோஹாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், நடுவானில் பிரேக்கிங் சிஸ்டம் செயலிழந்ததால் பரபரப்பு விமானியின் சாமர்த்தியத்தால், 326 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
-
Apr 29, 2025 07:07 IST
பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித் குமார் கண்டனம்
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும்; நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம் என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.
-
Apr 29, 2025 07:06 IST
அஜித்துக்கு பவன் கல்யாண் வாழ்த்து
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.