Chennai News Highlights: இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நாளை மின்தடை: சென்னையில் நாளை (20.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி சி.டி.எச். சாலை, கவரப்பாளையம், சிந்துநகர், டி.ஆர்.ஆர்.நகர், தனலஷ்மி நகர், எம்.ஆர்.எப். நகர், நாசர் மெயின் சாலை, மோஸஸ் தெரு, திருமுல்லைவாயல் ஆர்ச்அந்தோணிநகர், பொத்தூர், இன்டஸ்டரீஸ் போன்ற இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • May 19, 2025 22:09 IST

    இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

    இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும், 257 பேர் சிகிச்சையில் உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 19, 2025 20:36 IST

    'இந்தியா ஒன்றும் சத்திரமல்ல' என்ற உச்சநீதிமன்றம் கூறியதற்கு திருமாவளவன் எதிர்ப்பு

    இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தது தொடர்பான வழக்கு ஒன்றில், 'இந்தியா ஒன்றும் சத்திரமல்ல' என உச்சநீதிமன்றம் கூறியதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் உச்சநீதிமன்றம் இப்படியா சொல்வது? இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.



  • Advertisment
  • May 19, 2025 20:21 IST

    மழையில் அடித்து சென்ற நிலக்கடலையை மீட்க போராடிய விவசாயிக்கு இழப்பிடு

    மகாராஷ்டிராவில் விளைந்த நிலக்கடலை மழைநீரில் அடித்துச்செல்லபட்ட நிலையில், அதனை தடுக்க விவசாயி போராடியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், ஒன்றிய வேளான் அமைச்சர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் விவசாயி கௌரவ் பன்வாரை தொடர்புகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர், மாநில முதல்வர், வேளான் அமைச்சர் ஆகியோரிடம் பேசியிருக்கிறேன்.கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறியுள்ளார்.



  • May 19, 2025 20:15 IST

    மழைநீர் வடிகால் பணியில் தொழிலாளி பலி

    சென்னை அடையார் பகுதியில் மழை நீர் வடிகால் பணியின்போது தடுப்பு சுவர் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணியில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி



  • Advertisment
    Advertisements
  • May 19, 2025 19:17 IST

    இந்திய விமானங்களின் சேதம் குறித்த தகவல்களை வழங்க இயலாது - வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

    பாகிஸ்தான் உடனான தாக்குதலில் இந்தியாவின் எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன? என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.


     



  • May 19, 2025 19:00 IST

     பொறியியல் கலந்தாய்வு- 1.99 லட்சம் பேர் மனு

    தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு  இன்று மாலை வரை 1.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ளனர்



  • May 19, 2025 18:35 IST

    சென்னை திருவல்லிக்கேணியில் போதை ஊசியால் இளைஞர் மரணம் - 3 பேர் கைது

    சென்னை திருவல்லிக்கேணியில் போதை ஊசியால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14-ம் தேதி போதை ஊசி செலுத்திக் கொண்ட 21 வயது இளைஞர் மொய்தீன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவரது நண்பர்கள் அமித் ஷெரீப், இனயத்துல்லா, கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • May 19, 2025 18:20 IST

    இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

    தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, மதுரை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • May 19, 2025 18:17 IST

    ஆபரேஷன் சிந்தூர்- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விளக்கம்

    இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்  வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி. வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக உள்ள எம்.பி-க்கள் சசிதரூர், அசாதுதீன் ஓவைசி, அபராஜிதா சாரங்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

     



  • May 19, 2025 18:09 IST

    தயாரிப்பாளர், தொழிலதிபர் எங்கே? தீவிரமடையும் இ.டி விசாரணை

    டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் அமலாக்கத்துறையின் 3 மணி நேர விசாரணை நிறைவடைந்துள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் மற்றும் தொழிலதிபர் ரத்தீஷ் எங்கே? என அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

    விமான நிலைய ஆணைய அதிகாரிகளிடம் இருவரது சமீபத்திய பயணங்களின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வங்கி கணக்கு பரிவர்த்தனையை வைத்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. டெண்டர் முறைகேடு, பணிமாறுதல் லஞ்சம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது. 



  • May 19, 2025 17:57 IST

    டாஸ்மாக் முறைகேடு - முன்னாள் மண்டல மேலாளர் சுமனிடம் இ.டி விசாரணை

    சென்னையில் டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர் சுமனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் சென்னை மண்டல மேலாளராக பணிபுரிந்த சுமன் தற்போது நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     



  • May 19, 2025 17:22 IST

    அகதிகளை வரவேற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

    இந்தியா என்பது சத்திரம் அல்ல. எல்லா இடங்களில் இருந்தும் அகதிகளை வரவேற்க முடியாது. வேறு நாட்டிற்குச் செல்லுங்கள் எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 



  • May 19, 2025 17:20 IST

    புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 5 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியோடு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.



  • May 19, 2025 17:19 IST

    அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என தெரியவில்லை - திருமாவளவன்

    திமுக கூட்டணிதான், கூட்டணி வடிவத்தில் உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என தெரியவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 



  • May 19, 2025 16:22 IST

    சாம்சங் தொழிலாளிக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு

    முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் பேட்டி அளித்துள்ளார்.



  • May 19, 2025 16:20 IST

    பெங்களூருவில் மீண்டும் கனமழை

    கர்நாடக தலைவர் பெங்களூரு நகரில் 3 ஆவது நாளாக மீண்டும் மழை பெய்து வருகிறது. மெஜஸ்டிக், விஜயநகர், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், நாகரபாவி பகுதிகளில் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



  • May 19, 2025 16:18 IST

    மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடுக: நயினார்

    மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் எண்ணமிருந்தால் திமுக அரசு அதைக் கைவிடவேண்டும். மின் கட்டணம் உயர்ந்தால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படும். மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 



  • May 19, 2025 15:35 IST

    நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 19, 2025 15:30 IST

    தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி

    22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. "மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; இது வடக்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்" என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டியளித்துள்ளார். 



  • May 19, 2025 15:28 IST

    தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன - டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்து இருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன; கடந்த 12 ஆண்டுகளில், 2024ஆம் ஆண்டு மிகக் குறைவான அளவிலேயே கொலை வழக்குகள் பதிவு என்று டிஜிபி தெரிவித்துள்ளார். 



  • May 19, 2025 14:48 IST

    மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது - இந்திய கம்யூனிஸ்ட்

    “மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல். 2023இல் 18 சதவீதமும், 2024இல் 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நிலைக் கட்டணத்தால் கடுமையாக பாதிப்பு; மேலும் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 



  • May 19, 2025 13:57 IST

    "மின்வெட்டு குறித்து மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக" - முதல்வர் அறிவுரை

    பேரிடரின்போது மின்வெட்டு, பராமரிப்புப் பணி குறித்து நுகர்வோருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்; எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும் சாலைப் பணிகள் நடக்கும் இடங்களில் தடுப்புச் சுவர்கள், வேலிகள், ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் இன்று தென்மேற்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். 



  • May 19, 2025 13:55 IST

    "குறைபாடு அல்ல; குற்றம்" - ராகுல் மீண்டும் விமர்சனம்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிவித்ததால் எத்தனை விமானங்களை இழந்தோம்? ஆபரேஷன் சிந்தூர் பற்றி முன்னரே தெரிவித்தது ஏதோ ஒரு சிறு குறைபாடு அல்ல; குற்றம்; மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமைதிகாப்பது ஏன்? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியுள்ளார். 



  • May 19, 2025 13:43 IST

    தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது - வானிலை மையம்

    தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது; மார்ச் 1 முதல் தற்போதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10 செ.மீ; ஆனால், 19.2 செ.மீ. மழை பெய்துள்ளது சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பெய்துள்ளது; இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 4 செ.மீ; ஆனால் 7.4 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • May 19, 2025 13:12 IST

    சாம்சங் விவகாரம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்

    சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக, அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் தரப்பில் சி.ஐ.டி.யு சௌந்தரராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்



  • May 19, 2025 12:47 IST

    10.5% இடஒதுக்கீடு: தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் - ராமதாஸ்

    10.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம், ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்



  • May 19, 2025 12:37 IST

    பா.ம.க.,வில் பதவிகள் மாற்றம் என வெளியாகும் தகவல்கள் வதந்தி - ராமதாஸ்

    பா.ம.க.,வில் பதவிகள் மாற்றம், பொறுப்பு மாற்றம் என வெளியாகும் தகவல்கள் வதந்தி என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்



  • May 19, 2025 12:30 IST

    வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம்

    தேர்தலுக்கான வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் மே 22, 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது.. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை.



  • May 19, 2025 12:02 IST

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரி ஆஜர்

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியான ஜோதி சங்கர் விசாரணைக்கு ஆஜர்



  • May 19, 2025 11:27 IST

    தென்மேற்கு பருவமழை; எதிர்கொள்ள அரசு தயார்- ஸ்டாலின்

    தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

    தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்பு உபகரணங்கள், வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - ஸ்டாலின்



  • May 19, 2025 10:52 IST

    ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான Prostate புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஜோ பைடன் நலம் பெற கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட  அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை



  • May 19, 2025 09:40 IST

    ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு

     ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாக். அமைச்சர் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் பிசிசிஐ தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • May 19, 2025 09:37 IST

    தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை -வானிலை மையம்

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.



  • May 19, 2025 09:08 IST

    சென்னையில் மழை தொடரும்: பிரதீப் ஜான்

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யும். வட தமிழ்நாட்டில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசையில் இருந்து மேகங்கள் உருவாகி நகருக்குள் நகர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறையும் தமிழ்நாட்டில் இம்மாதம் 25-ம் தேதிக்கு முன்னரே பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.



  • May 19, 2025 08:42 IST

    சாலையில் திடீர் பள்ளம் - 2 பிரிவுகளில் வழக்கு

    திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் தொடர்பாக 281, 125A ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான காரின் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • May 19, 2025 08:37 IST

    ஈரோடு முதிய தம்பதி கொலை - 4 பேர் கைது

    ஈரோட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில், நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் இதுவரை ஞானசேகரன், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 19, 2025 08:06 IST

    மின்கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

    தமிழ்நாடு மின் வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத்தான் மின் கட்டணம் உயா்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சாா்பில் கூறப்படுகிறது. மின்வாரிய இழப்புக்கு காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது தான். எனவே, மின்கட்டணத்தை உயா்த்தும் திட்டத்தை அரசு கைவிடுவதுடன், மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.



  • May 19, 2025 08:02 IST

    ஐ.பி.எல்: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற 3 அணிகள்!

    நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு நேற்று ஒரேநாளில் 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய 3 அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ , ஐதராபாத் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



  • May 19, 2025 07:34 IST

    18 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 19, 2025 07:30 IST

    தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயா்வு?

    தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு நிகழாண்டு 3 முதல் 3.16% வரை மின்கட்டணத்தை உயா்த்தவும், உயா்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • May 19, 2025 07:21 IST

    8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 19, 2025 07:10 IST

    தென்மேற்கு பருவமழை: ஸ்டாலின் இன்று ஆலோசனை

    தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.



Chennai Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: