Chennai News Highlights: துணைவேந்தர் நியமனத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN & SC

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
    • Jun 03, 2025 21:38 IST

      துணைவேந்தர் நியமனத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

      துணைவேந்தரை நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் தரும் தமிழ்நாடு அரசின் சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.



    • Jun 03, 2025 20:09 IST

      சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

      சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.



    • Advertisment
      Advertisements
    • Jun 03, 2025 19:51 IST

      சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

      இன்று இரவு 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Jun 03, 2025 19:18 IST

      'தக் லைஃப்' விவகாரம்: கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்

      'தக் லைஃப்' திரைப்படம் தொடர்பாக கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், "தமிழ் மற்றும் கன்னட திரையுலகங்களுக்கு இடையிலான நல்லுறவை மதித்து, கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை ஜூன் 5-ஆம் தேதி கர்நாடகாவில் தடையின்றி வெளியிட அனுமதி அளிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    • Jun 03, 2025 18:45 IST

      தமிழர் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர்: கருணாநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

      தமிழ் மொழி, கலை, தமிழ்நாட்டின்  வளர்ச்சி, தமிழர் நலன் என அனைத்திற்கும்  தம் வாழ்நாளை அர்பணித்த தலைவர் கலைஞர் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    • Jun 03, 2025 18:12 IST

      சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு

      சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த திமுகவினர். பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியா சார்பில் கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்தது.



    • Jun 03, 2025 18:09 IST

      படத்தை வெளியிட மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? பேராசிரியர் அருணன்

      இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இப்போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், என்ன பேச முடியும்? அமித்ஷா பேசிய தவறான கருத்துக்கு நாம் ஆதாரத்துடன் எதிர் கருத்து வைக்கிறோம். அதேபோல் கருத்துக்கு எதிர் கருத்தை வைக்கலாமே தவிர மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என சி.பி.எம். பேராசிரியர் அருணன் கூறியுள்ளார்.



    • Jun 03, 2025 17:17 IST

      +2 விடைத்தாள் நகலை நாளை பெற்று கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்

      +2 விடைத்தாள் நகலை நாளை முதல்  http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 
      பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.



    • Jun 03, 2025 16:41 IST

      கமலுக்கு திருமா ஆதரவு

      வரலாற்று உண்மையை கமல்ஹாசன் பேசியுள்ளார்..அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. கன்னட மொழி குறித்த கமல்ஹாசன் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். 



    • Jun 03, 2025 16:16 IST

      ரயில்வே துறைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

       “சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி குளிரூட்டி வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.

      சாதாரண வகுப்புகளுக்கான கட்டணத்தைவிட குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கான கட்டணத்திற்கு குறைந்த அளவே மானியம் வழங்கப்படுகிறது. குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் தான் தெற்கு தொடர் வண்டித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

      தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை கைவிட வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    • Jun 03, 2025 16:14 IST

      கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை: ராஜன்

      கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. எக்காரணம் கொண்டும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கமாட்டார். கன்னடர்களும் எங்கள் சகோதரர்களே, இணக்கமாக இருக்கவே தமிழர்கள் விரும்புகிறோம். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமலை நீதிபதி வலியுறுத்துவது வருத்தம் தருகிறது என திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் கூறியுள்ளார்.



    • Jun 03, 2025 15:49 IST

      ஜிப்மர் மருத்துவமனை ஜூன் 7ம் தேதி இயங்காது

      புதுச்சேரி, ஜூன் 7ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் அறிவித்துள்ளார்.



    • Jun 03, 2025 15:32 IST

      ‘தக் லைஃப்’ வழக்கு - நீதிமன்றம் கருத்து!

      விளக்கம் எல்லாம் சரிதான். கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை மட்டும் விடுபட்டுள்ளது. தக் லைஃப் வழக்கில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட விளக்க கடிதம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



    • Jun 03, 2025 15:22 IST

      திராவிட மொழிகளின் தாய் தமிழ்: சீமான்

      திராவிட மொழிகளின் தாய் தமிழ் என அனைவருக்கும் தெரியும். கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை. வாய்க்கு வந்ததை அவர் கூறவில்லை. கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம். 63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களில் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா? என சீமான் பேசியுள்ளார். 



    • Jun 03, 2025 15:10 IST

      “யார் அந்த சார்?- பதிலுக்காக காத்திருப்போம்” - நயினார் நாகேந்திரன்

      அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்ற பதிலுக்காக காத்திருப்போம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன. அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக வட்டச் செயலாளர் சண்முகத்தை ஏன் விசாரிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 



    • Jun 03, 2025 14:05 IST

      வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் 100% தேர்ச்சி; தமிழ்நாடு முதலிடம் 

      15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதவர்கள் அனைவருக்கும் எழுத்தறிவு புகட்ட மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி அமல்படுத்தப்பட்டது. 2024 - 25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து கல்வி பயின்றனர். வயது வந்தோர் அடிப்படை கல்வி மற்றும் எண் கணிதத் திறன் மதிப்பீட்டுத் தேர்வில் கல்வி பயின்ற அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.



    • Jun 03, 2025 13:47 IST

      விரைவில் தே.மு.தி.க-விடம் பேச உள்ளோம்; அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க முயல்வோம் - நயினார் நாகேந்திரன்

      தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், விரைவில் தே.மு.தி.க-விடம் கூட்டணி குறித்து பேச உள்ளோம்; அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க முயல்வோம் என்று தெரிவித்துள்ளார்.



    • Jun 03, 2025 13:01 IST

      ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது’ - கர்நாடக திரைப்பட சங்கத் தலைவருக்கு கமல்ஹாசன் கடிதம்

      கர்நாடக திரைப்பட சங்கத் தலைவருக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது; “உங்கள் கடிதம் 30/05/2025 அன்று பெறப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். டாக்டர் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தின், குறிப்பாக சிவா ராஜ்குமார் அவர்களின் மீது உள்ள உண்மையான பாசம் காரணமாக நான் பேசிய 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழாவில் எனது அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சூழலிலிருந்து விலகி எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. எனது வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கும் நோக்கத்துடன் மட்டுமே இருந்தன. கன்னட மொழிக்கு எதிராக எந்த விவாதமோ அல்லது தவறான பாரம்பரியமோ இல்லை.

      சினிமா மக்களிடையே ஒரு பாலமாகவே இருக்க வேண்டும் – அது ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், மேலும் எந்தவொரு பொது அமைதியின்மைக்கும் நான் ஒருபோதும் காரணமாக இருந்ததில்லை.

      எனது வார்த்தைகள் நான் intended (நோக்கிய) அதே எண்ணத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் உண்மையாக நம்புகிறேன். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு இது என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



    • Jun 03, 2025 12:52 IST

      உங்கள் பேச்சால் அமைதியின்மை ஏற்பட்டு சமூக நல்லிணக்கம் பாதிப்பு - கர்நாடக ஐகோர்ட் நீதிபதி கருத்து

      தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு கோரிய வழக்கில் விசாரணையின்போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? உங்கள் பேச்சால் அமைதியின்மை ஏற்பட்டு சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். பிரகு, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.



    • Jun 03, 2025 12:42 IST

      ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்குமே - கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட் கேள்வி

      “ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்குமே; பொதுவெளியில் உங்களைப் போன்ற பிரபலமான நபர் இப்படி பேசாலாமா?” நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



    • Jun 03, 2025 11:37 IST

      9 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் கீதா ஜீவன்

      Credit: Sun News



    • Jun 03, 2025 11:15 IST

      அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்வு: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

      அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்வு இல்லை

      -போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்



    • Jun 03, 2025 10:48 IST

      கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை



    • Jun 03, 2025 10:47 IST

      ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார்: அரசின் விதிமுறைகள் செல்லும்

      ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேரக் கட்டுப்பாட்டை விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

      விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி



    • Jun 03, 2025 10:27 IST

      கனிமொழி புகழாரம்



    • Jun 03, 2025 10:26 IST

      ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்?

      ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேரக் கட்டுப்பாட்டை விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது

      நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு தீர்ப்பளிக்க உள்ளனர்



    • Jun 03, 2025 09:55 IST

      கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு மீது இன்று விசாரணை

      கர்நாடகத்தில் ‘தக் லைப்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



    • Jun 03, 2025 09:46 IST

      நடுவானில் விமானத்தில் பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர்

      மொரிஷியசில் இருந்து இருதய சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்ட 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நடுவானில் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் சென்னையில் தரையிறங்கிய நிலையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • Jun 03, 2025 08:50 IST

      ”இன்றும், நாளையும் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்”

      தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, வேலுார், திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக கூறி உள்ளது.



    • Jun 03, 2025 08:33 IST

      மாற்றுத் திறனாளி நியமன மசோதா -ஆளுநர் ஒப்புதல்

      உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650, கிராமப் பஞ்சாயத்து 12,913, ஊராட்சி ஒன்றியம் 388, மாவட்ட ஊராட்சியில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள்



    • Jun 03, 2025 08:32 IST

      நடிகர் அஜய் வாண்டையார் மீது மோசடி வழக்குப்பதிவு

      ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் ரூ. 2.11 கோடி ஏமாற்றியதாக புகாரில், அ.தி.மு.க-வை சேர்ந்தவரும், நடிகருமான அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுபோதையில், வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது பட்டினம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.



    • Jun 03, 2025 08:31 IST

      டொனால்டு டிரம்ப் - சீன அதிபர் பேச்சுவார்த்தை

      வர்த்தகப்போர் தற்போது மெல்ல தணிந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த வாரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் வர்த்தக மோதலை கைவிட்டு இருநாட்டு உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • Jun 03, 2025 08:18 IST

      புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் பயன்பாடு

      நாட்டில் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்காவின் வரி காலக்கெடு முடிவதற்குள் பொருட்களை ஏற்றுமதி செய்ய நிறுவனங்கள் முனைப்பு காட்டியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், திருமண சீசன்களாலும் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது.



    • Jun 03, 2025 08:06 IST

      இந்தியாவில் 4,000-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு

      2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.நேற்றைய நிலவரப்படி நாட்டில் 3 ஆயிரத்து 961 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் 506 பேர், டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.



    • Jun 03, 2025 07:51 IST

      காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

      தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    • Jun 03, 2025 07:46 IST

      முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர்: ஸ்டாலின்

      கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள். ஐந்து முறை முதல்-அமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



    • Jun 03, 2025 07:34 IST

      ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?

      ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. இதனால் மோடி ஜி7 உச்சி மாநாட்டை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



    • Jun 03, 2025 07:13 IST

      ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு

      கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 8 படுக்கைகள், பிபிஇ கிட், வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது



    Tamilnadu Live News Udpate Chennai

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: