Chennai News Highlights: டெல்லி மதராஸி கேம்ப் பாதிப்பு - ரூ. 50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்

Tamil Nadu Latest Live News Update in Tamil 16 June 2025- இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest Live News Update in Tamil 16 June 2025- இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madarasi Camp

Today Latest Live News Update in Tamil 16 June 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மழை நிலவரம்: நீலகிரியில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழை காரணமாக 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு விடுமுறை அறிவித்துள்ளார்.  

  • Jun 16, 2025 22:08 IST

    3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ்

    மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் நடைபெற இருக்கிறது. 250 சர்வதேச புள்ளிகளைக் கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதத்தில், சென்னையில் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.



  • Jun 16, 2025 21:02 IST

    ஜெகதீப் தன்கர் விழாவில் ஃபயர் அலாரம் - புதுச்சேரியில் பரபரப்பு

    அரசு முறை பயணமாக மூன்று நாட்கள் புதுச்சேரி வந்துள்ள துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று பிற்பகல்  ஜிப்மர்  வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசிக் கொண்டிருந்த போது பீப் சவுண்டு (Fire alarm) 3 முறை கேட்டது. உடனடியாக தனது உரையை நிறுத்திவிட்டு இந்த சவுண்ட் எனக்காகவா என கேட்டார். இந்நிலையில், விழா தொடங்கிய போது குத்துவிளக்கு ஏற்றியதில் இருந்து வெளியேறிய புகை காரணமாக இந்த சத்தம் எழுப்பப்பட்டதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Jun 16, 2025 20:48 IST

    டெல்லி மதராஸி கேம்ப் பாதிப்பு: ரூ. 50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்

    டெல்லி மதராஸி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி, 370 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ. 8000 நிதியுதவி மற்றும் அரிசி, கோதுமை, சர்க்கரை கொண்ட ரூ. 4000 மதிப்பிலான அத்தியாவசிய தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 20:22 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நேரில் ஆஜர்படுத்த உத்தரவு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 பேரையும், ஜூன் 30-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 16, 2025 20:18 IST

    சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - ஊழியருக்கு வலைவீச்சு

    சென்னை, அம்பத்தூர் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேவாலயத்தில் பணியாற்றிய ஏசுதாஸ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 19:42 IST

    ம.தி.மு.க தலைமை அலுவலகம் மீது கல் வீச்சு

    சென்னையில், செயல்பட்டு வரும் ம.தி.மு.க தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். குறிப்பாக, தீயணைப்பு வீரர்கள் சீருடையில் வந்த அந்நபர், அலுவலகம் உள்ளே சென்று மின்விசிறி போன்றவற்றை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 16, 2025 19:17 IST

    புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைக்கும் ஸ்டாலின்

    சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் சுமார் ரூ. 80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இதற்கான விழாவை ஜூன் 21 அல்லது 27-ஆம் தேதி நடத்த இருப்பதாக திட்டமிட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jun 16, 2025 19:04 IST

    86 பெண் காவல் ஆய்வாளர்கள் விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

    பெண் காவல் ஆய்வாளர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Jun 16, 2025 18:44 IST

    பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது குற்றச்சாட்டு

    நடப்பு டி.என்.பி.எல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், ஓய்வுபெற்ற இந்திய அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை துடைக்கும் துண்டுகளில், இரசாயனத்தை பயன்படுத்தியதாகவும், இதனால், பந்து வழக்கத்தை விட கனமானதாகவும் குற்றம் சட்டியுள்ளது. இதனாலேயே, அந்த பந்து பேட்டில் படும்போதெல்லாம் உலோகத்தின் ஒலியை போன்று சத்தம் எழுந்ததாகவும் குற்றம் சட்டியுள்ளது. 



  • Jun 16, 2025 18:41 IST

    விமான விபத்து - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் விளக்கம்

    “விமானப் போக்குவரத்து என்பது மிகவும் சிக்கலான வணிகம். பல சோதனைகள் முழுமையாக்கப்பட்டும் இந்த விபத்து நடந்ததுள்ளது. விசாரணைக்குப் பிறகு விபத்து ஏன் நடந்தது என்பதை கண்டுபிடிப்போம். நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் இழந்த உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இறந்த அனைவரையும் நம் குடும்பமாக என்றென்றும் கருதுவோம்'' என்று  டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார். 



  • Jun 16, 2025 18:34 IST

    அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி  - தமிழிசை விளக்கம் 

    அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பற்றி அண்ணாமலை பேச கூடாது என தான் கூறியதாக வெளியான தகவலுக்கு தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். பா.ஜ.க இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் அரசியல் ரீதியாக சில கருத்துகளை பரிமாறி கொண்டேன். பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனையை மக்களிடம் எடுத்துச் சொல்வது குறித்தும் விவாதித்தேன். கூட்டணி பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தி இருப்பதாகவும் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.



  • Jun 16, 2025 18:32 IST

    ஐ.சி.சி மகளிர் உலக கோப்பை - அட்டவணை வெளியீடு

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் செப். 30 முதல் நவ. 2 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் உலககோப்பை இந்தியாவில் 4 மைதானங்களிலும் இலங்கையில் கொழும்பு மைதானத்திலும் நடைபெறுகிறது. செப்.30 பெங்களூருவில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது. 

     



  • Jun 16, 2025 17:23 IST

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம். "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பெற சிறப்பு திட்ட செயலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகையைப் பெறாதவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.



  • Jun 16, 2025 16:47 IST

    ஏடிஜிபியை கைது செய்ய நீதிபதி உத்தரவு

    7 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏ.டி.ஜி.பி ஜெயராமனை கைது செய்து காவல் துறையின் பாதுகாப்பில் வைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். ஆள் கடத்தலுக்கு ஏ.டி.ஜி.பி ஜெயராமன் தனது அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தத் தகவல் புதிய தலைமுறை ஊடகத்தால், ஜூன் 16, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு "JUST IN" செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 16:45 IST

    "கட்டப்பஞ்சாயத்து நடத்த தான் வாக்களித்தனரா?" - நீதிபதி

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை "மக்களின் குரலாக சட்டமன்றத்தில் பேச தான் 70 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்" "கட்டப்பஞ்சாயத்து நடத்த தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தனரா?" - எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி தரப்புக்கு நீதிபதி கேள்வி



  • Jun 16, 2025 16:14 IST

    CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவி - ஸ்டாலின் வாழ்த்து

    CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு தகுதி பெற்றுள்ள, திருச்சி மிளகுப்பாறை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் மாணவி ராகிணியைச் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேனா பரிசாக வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • Jun 16, 2025 15:58 IST

    சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ. அறிவிப்பு

    சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் 2.5%ஆகக் குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% குறைப்பை அடுத்து வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தன. கடன் வட்டி விகித குறைப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 15:28 IST

    கூட்டணி குறித்து அண்ணாமலை பேச தமிழிசை எதிர்ப்பு?

    அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேச தமிழிசை எதிர்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.அண்ணாமலை பொதுவெளியில் பேசக் கூடாதென மேலிட பொறுப்பாளரிடம் தமிழிசை வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் உட்கட்சி, கூட்டணி குறித்து தமிழிசை விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதகார் ரெட்டியிடம் தமிழிசை 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.



  • Jun 16, 2025 15:12 IST

    ஜெகன்மூர்த்தி ஆஜராகாததால் விசாரணை சிறிதுநேரம் ஒத்திவைப்பு

    ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி ஆஜராகாததால் விசாரணையை சிறிது நேரம் நீதிபதி ஒத்திவைத்தார். ஆள் கடத்தல் வழக்கில் மதியம் 2.30 மணிக்கு ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். ஏடிஜிபி ஜெயராம் உயர்நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் ஜெகன்மூர்த்தி இன்னும் வரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புரட்சி பாரதம் கட்சி வழக்கறிஞர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 14:53 IST

    சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

    சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஏடிஜிபி ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆள் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் கோரிய பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை விசாரித்த ஐகோர்ட், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டது. ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் அரசு வாகனத்தை பயன்படுத்தியுள்ளார். பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.



  • Jun 16, 2025 14:53 IST

    அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒரு பயணியான ரமேஷ் குறித்த புதிய வீடியோ வெளியீடு

    அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒரு பயணியான ரமேஷ் குறித்த புதிய வீடியோ வெளியானது. மருத்துவக்கல்லூரி ஹாஸ்டல் மீது விமானம் விழுந்து, இரண்டாக உடைந்து வெடித்துச் சிதறியபோது உயிர் தப்பியதாக ரமேஷ் கூறியிருந்தார். அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 11A இருக்கையிலிருந்து அதிசயமாக உயிர் பிழைத்தவர் நடந்து செல்வதை புதிய வீடியோ வரலாகிறது



  • Jun 16, 2025 14:42 IST

    அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த விமான விபத்தில் விமானி அறையின் குரல் பதிவு சாதனம் கண்டெடுப்பு

    அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த விமான விபத்தில் விமானி அறையின் குரல் பதிவு சாதனம் கண்டெடுப்பு. குரல் பதிவு சாதனம் மூலம் விபத்துக்கு சற்று முன் விமானிகள் என்ன பேசிக் கொண்டார்கள் என கண்டறியப்பட வாய்ப்பு; குரல் பதிவு சாதனத்தில் உள்ள தரவுகள் ஆய்வகங்கள் மூலம் வெளிக் கொண்டுவரப்படும்; சாதனம் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளதோ அந்த அளவுக்கு விவரங்கள் பெறுவது தாமதமாகும்



  • Jun 16, 2025 14:17 IST

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளது

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 60% கூடுதலாக பதிவாகியுள்ளது.



  • Jun 16, 2025 14:16 IST

    டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

    டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பாதிப்பால் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தியின் நிலை சீராக உள்ளது, தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Jun 16, 2025 13:45 IST

    திருமாவளவன் எப்போது மீசையை முறுக்கிப் பேசுவார் காத்திருக்கிறோம் - அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை: “திருமாவளவன் அண்ணன் பேச வேண்டிய இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என்கிறார்; எப்போது பேசுவார் என்று நாங்களும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



  • Jun 16, 2025 13:19 IST

    ஹாங்காங் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

    ஹாங்காங்கில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்றில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் ஹாங்காங் திரும்பியது. இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று மதியம் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது. விமானிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஹாங்காங் விமான நிலையத்திற்கே திரும்புவது என முடிவு செய்தனர்.

    விமானம் பாதுகாப்பாக ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். தற்போது, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என்ன என்பதை கண்டறிய அதிகாரிகள் விமானத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 16, 2025 13:01 IST

    மக்கள்தொகை கணக்கெடுப்பு: 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்பு - அரசிதழில் வெளியீடு

    மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் அடுத்த ஆண்டு (2026) தொடங்கும் என்றும், 2028-ல் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகளுக்காக 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 1.3 லட்சம் அதிகாரிகள் கணக்கெடுப்புப் பணிகளில் பங்கேற்க உள்ளனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 12:29 IST

    சிறுவன் கடத்தல் வழக்கு: ஜெகன்மூர்த்தி பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராஜ ஐகோர்ட் உத்தரவு

    17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்படும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர் முன் ஜாமின் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக உத்தரவு. ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆள் கடத்தலுக்கு ஜெயராமனின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



  • Jun 16, 2025 11:34 IST

    நீதிபதி கே.சுரேந்தர் பதவியேற்பு

    தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்வு



  • Jun 16, 2025 11:32 IST

    பிரிட்டிஷ் ஏர்வேஸின் BOEING 787 விமானத்தில் இயந்திரக் கோளாறு.

    Video Credit: Sun News 



  • Jun 16, 2025 11:28 IST

    விமான விபத்து நடந்த இடத்தை வந்தடைந்த போயிங் குழு

    Boeing நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தை வந்தடைந்தது.



  • Jun 16, 2025 11:27 IST

    விஜய் ரூபானியின் உடல் இன்று தகனம்

    முன்னாள் முதல்வர், மறைந்த விஜய் ரூபானி அவர்களின் மனைவி அஞ்சலி ரூபானி, அவர்களது மகன் ரிஷப் ரூபானியுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
    முன்னாள் முதல்வர் உடல் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருந்து விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். பூத உடல் விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்படும்



  • Jun 16, 2025 10:28 IST

    விமான விபத்து: அகமதாபாத் வந்த அமெரிக்க அதிகாரிகள்

    அமெரிக்க அதிகாரிகளும் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அதிகாரிகளும் அகமதாபாத் வந்துள்ளனர். ஜூன் 12 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ய அவர்கள் தற்போது சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதற்காக அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்படும் காட்சிகள்.



  • Jun 16, 2025 09:56 IST

    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்

    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார். மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Jun 16, 2025 09:32 IST

    ”தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்”

    தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 16, 2025 08:56 IST

    சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு

    கல்லூரி திறப்பை ஒட்டி சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் ஊர்வலமாக வர உள்ளதாக கிடைத்த தகவலால் அதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



  • Jun 16, 2025 08:40 IST

    லண்டன்-சென்னை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

    லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. உடனே விமானி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து புறப்பட்ட 37 நிமிடத்தில் அந்த விமானம் உடனடியாக திரும்பிச் சென்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



  • Jun 16, 2025 08:18 IST

    மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

    காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி(78), உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.



  • Jun 16, 2025 08:16 IST

    டி.என்.பி.எஸ்.சி. பதவி உயர்வில் சமூகநீதி: குழு அமைப்பு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் G.M.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Jun 16, 2025 08:01 IST

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

    இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் 92 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் அங்கு வேலையிழந்து ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.



  • Jun 16, 2025 07:57 IST

    சென்னை - திருவண்ணாமலை மெமு ரயில் 2 நாட்கள் ரத்து

    காட்பாடி யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு பயணிகள் ரெயில், திருவண்ணாமலை - தாம்பரம் ரெயில் உள்பட 6 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, 16-ம் தேதி (இன்று) 18-ம் தேதி ஆகிய நாட்களில், சென்னை கடற்கரை - திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி - திருப்பதிக்கு இரவு 9.10 மணி ( 67210), , திருப்பதி - காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, திருவண்ணாமலை - தாம்பரத்துக்கு 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) ரத்து செய்யப்பட உள்ளது.



  • Jun 16, 2025 07:47 IST

    அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை

    நெல்லை, சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க இருப்பதால், அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.



  • Jun 16, 2025 07:46 IST

    காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும்

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 16, 2025 07:28 IST

    விமான விபத்து - உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது. எதிர்காலத்தில் விமான விபத்துக்களை தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.



  • Jun 16, 2025 07:28 IST

    பில்லூர் அணையில் நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

    கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழுக் கொள்ளளவை நெருங்குகிறது. நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு. பாதுகாப்பு கருதி 8 ஆயிரத்து 60 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 07:27 IST

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 16, 2025 07:26 IST

    பள்ளிகளுக்கு விடுமுறை

    நீலகிரியில் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுமுறை அறிவித்துள்ளார். 

    கோவை மாவட்டம் வால்பாறையில்  உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • Jun 16, 2025 07:23 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.



news updates Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: