ஐடி நிறுவனங்களின் தலைமையகமாகவும், சென்னையின் அடையாளமாகவும் விளங்கி வரும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்)யில், பல அடுக்கு வழிப்பாதைகள் என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த மேம்பாட்டு திட்டங்கள், ரூ.3,088 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பில், உயர்த்தப்பட்ட வழிப்பாதையை அமைப்பதற்காக, மாதவரம் முதல் சிப்காட் வழித்தடத்தில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில அரசும் முதற்கட்டமாக தரமணி முதல் சிறுசேரி வழித்தடத்திலும், இரண்டாவது கட்டமாக சிறுசேரி முதல் மகாபலிபுரம் வழித்தடத்தில் என ஓஎம்ஆர் சாலையில், உயர்த்தப்பட்ட வழிப்பாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஓஎம்ஆர் சாலையில், 18 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தரமணி முதல் சிறுசேரி வழித்தடத்தில் முதற்கட்ட உயர்த்தப்பட்ட வழிப்பாதையை, சென்னை மெட்ரோ மற்றும் மாநில அரசு இணைந்து மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்பட உள்ள முதல் அடுக்கில் வாகனங்களும் இரண்டாவது அடுக்கில் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட உள்ளது. பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில், மெட்ரோ ரயில் மூன்றாவது அடுக்கில் இயக்கப்பட உள்ளது.
ஒருமணிநேரத்தில் 10 ஆயிரம் கார்கள் பயணிக்கும் வகையில், இந்த பல அடுக்கு வழிப்பாதைகள் ஓஎம்ஆர் சாலையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.