காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
தொடர்ந்து சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த ஜனவரி 4 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மூன்றாவது நாளாக நேற்றும் (பிப்.07) 500-க்கும் மேற்பட்ட சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர் இ.முத்துக்குமார் பேசுகையில், "தொழிற்சங்கத்தை உருவாக்கியதற்கு பழிவாங்கும் வகையில், காரணமின்றி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று தொழிலாளர்களின் இடைநீக்கத்தை நிர்வாகம் திரும்பப் பெறும் வரை, மாற்றுக் குழுவைக் கொண்டு தொழிற்சங்கத்தை பலவீனப்படுத்துவதை நிறுத்தும் வரை மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டங்கள் தொடரும்," என்று அவர் கூறினார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் கொள்கையை மீறியதாகவும், ஊழியர்களின் போராட்டங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சாம்சங் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “இந்தக் கொள்கையை மீறிய சில தொழிலாளர்கள் மீது நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ புகார்களை அளித்துள்ளது. முறையான விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் பணிச்சூழல் மற்றும் பிற தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுடன் கூட்டு ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளைத் தொடங்குவோம். தமிழக அரசு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்." என்று அவர் கூறியுள்ளார்.
தொழிற்சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற மாநில தொழிலாளர் துறை சமரசப் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடுமாறும், சாம்சங் இடைநீக்கத்தை திரும்பப் பெறுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.