/indian-express-tamil/media/media_files/2025/04/02/V1VNjHeOwehnJ5xVZwtt.jpg)
21 வயது இளைஞன், 17 வயது சிறுமியுடன் ஓடிப் போய் திருமணம் செய்துகொண்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றவாளியாகக் கருதப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த பெண் கர்ப்பிணியாகவும் 22 வயதுடையவராகவும் இருந்தாலும் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறி, அரசு தரப்பு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கவில்லை. இதன் விளைவாக, 2022 நவம்பரில் நீலகிரி செஷன்ஸ் நீதிமன்றம் அந்த இளைஞனுக்கு கடத்தல் மற்றும் சட்டவிரோத அடைத்து வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இருப்பினும், (ஏப்ரல் 29) செவ்வாய்க்கிழமையன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், அந்த இளைஞனை பாலியல் வன்கொடுமை குற்றவாளியாகக் கூறி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். "சம்பவத்தின்போது அந்தப் பெண் 17 வயது குழந்தையாக இருந்ததால் அவர் ஓடிப்போனது மற்றும் அவரது சம்மதம் என்ற கேள்விக்கே இடமில்லை" என்று நீதிபதி கூறினார்.
அந்த இளைஞனும், அந்தப் பெண்ணும் திருமணம் செய்ததால் ஏற்கனவே நடந்த போக்சோ குற்றம் இல்லாம போயிடும்னு அந்த இளைஞரோட வழக்கறிஞர் வாதிட்ட நிலையில் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், குற்றம் தனிநபருக்கு எதிரானது மட்டுமல்ல, சமூகத்திற்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்தது. இத்தகைய வாதத்தை ஏற்றுக்கொண்டால், போக்சோ சட்டத்தின் நோக்கமே தோல்வியடைந்து "விபரீதமான விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
அத பெண் தனது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி தானாகவே தன்னிடம் வந்ததாக இளைஞர் கூறினார். தான் அவளை தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டு திரும்பியதாகவும் அவர் கூறினார்.
காவல்துறை அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்திரேட் முன் பாலியல் தொடர்பு குறித்த குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும், மருத்துவ அறிக்கை பாலியல் வன்கொடுமையை உறுதியாகக் காட்டவில்லை என்றும் பிரதிவாதி தரப்பு வாதிட்டது. விசாரணையின்போது அந்தப் பெண் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கவில்லை மற்றும் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டார்.
அரசு தரப்பு வழக்கின்படி, அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவருடன் மைசூருக்குச் சென்று அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும், "அவர்களுக்கு இடையே உடலுறவு இருந்ததாகவும்" மருத்துவ சான்றுகளுடன் தெரிவிக்கப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்றம் அந்த இளைஞனை கடத்தல் மற்றும் சட்டவிரோத அடைத்து வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக தண்டனை விதித்தது, ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது. அந்தப் பெண்ணின் தந்தை மகள் காணாமல் போனதாக புகார் அளித்ததையடுத்து இந்த வழக்கு தொடங்கியது. இந்த மேல்முறையீட்டு மனுவை மாநில அரசு தாக்கல் செய்தது.
சாட்சிகளை ஆய்வு செய்த நீதிபதி வேல்முருகன், அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவரை அணுகியிருந்தாலும், அவர் சிறுமி என்பதை அறிந்திருந்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கத் தவறிவிட்டார் என்று கூறினார்.
ஆண் மாஜிஸ்திரேட்டுக்கு அளித்த வாக்குமூலத்தில் அந்தப் பெண் "நாங்கள் ஒன்றாக இருந்தோம்" என்று கூறியது, மறைமுகமாக உடலுறவைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. வெட்கத்தின் காரணமாக அந்தப் பெண் வெளிப்படையான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்ற அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அந்த இளைஞன் தனது மனைவி மற்றும் தாயை கவனித்துக்கொள்வதாகவும், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி நீதிமன்றத்திடம் கருணை காட்டும்படி கேட்டார். சட்டத்தின் தீவிரத்தன்மை குறித்து தனக்கு தெரியாது என்றார். ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகள் என்றும், அதை குறைக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் நீதிமன்றம் விதித்தது. கடத்தல் மற்றும் சட்டவிரோத அடைத்து வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தண்டனை, தற்போதைய தண்டனையுடன் சேரும் என்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.