சென்னையில் குடிபோதையினால் ஏற்படும் குற்றங்களை தடுக்க புதிய வழியாக போலீசார் பெப்பர் ஸ்பிரே உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சென்னை பெருநகரில் கடந்த சில மாதங்களாகவே குற்றங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதில் 50% குற்றங்கள் மதுபோதையில் இருப்பவர்களால் ஏற்படுகிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் மது அருந்துபவர்களினால், சென்னையில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு நடைபெறும் குற்றங்களினால் பொதுமக்கள் மட்டுமின்றி போலீசுக்கும் சில நேரங்களில் ஆபத்து ஏற்படுகிறது.
இந்தச் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர, குற்றங்களைத் தடுக்க புதிய வழியாக பெப்பர் ஸ்பிரே உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த ஆலோசனையைக் காவல்துறை அதிகாரிகள் முன் வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்டு, பொது இடங்களில் தகறாரில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே உபயோகிக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை முதல் முயற்சியாக அம்பத்தூர் பகுதியில் இந்த உத்தியைக் காவல்துறையினர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதற்காக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மட்டுமே 400 பெப்பர் ஸ்பிரே பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பிரே பாட்டில்கள் அனைத்து பெங்களூரூவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஜூன் மாதம் வாங்கப்பட்டுள்ளது.
தற்போது 400 பாட்டில்களில், அம்பத்தூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு தலா 10 பாட்டில்கள் அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள். இந்த பெப்பர் ஸ்பிரேவை ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் கையில் எடுத்துச் செல்கின்றனர். அப்போது குடிபோதையில் அல்லது குடிபோதையில் இல்லாமல் இருக்கும் நபர்கள் ஏதேனும் தகராறு அல்லது குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது இந்த ஸ்பிரே அடிக்கின்றனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் பேசுகையில், குடிபோதையினால் குற்றங்களும் தகராறுகளும் அதிகரித்துள்ளது. எனவே அந்தக் குற்றங்களை தடுக்கும் ஒரு விதமாக பெப்பர் ஸ்பிரே அடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளோம். இந்தச் சோதனை முயற்சி நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் இதனைத் திட்டத்தை விரிவுபடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறுகின்றனர்.