சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போரூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. நேற்று இரவு தனது நண்பர்களுடன் தெள்ளியார் அகரம் பகுதியில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐந்து வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்டோர் தமிழை தனியாக அழைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெறி அடங்காத மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், வழியில் நடந்து சென்று கொண்டிருந்த சூர்யா என்ற வட மாநில இளைஞரையும் ஆத்திரத்திம் வெட்டினர்.
பின்னர் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்களை தங்களது கத்தியால் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து படுகாயம் அடைந்த தமிழை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சையில் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சபரி என்பவருக்கும் தமிழுக்கும் கஞ்சா விற்பதில் முன் விரோதம் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் நேற்று இரவு தமிழை, சபரி தனது நண்பர்களுடன் வந்து வெட்டிச் சென்றது தெரியவந்தது.
மேலும் போரூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாகவும், இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உளவு பிரிவு போலீசார் அதனை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் கூட்டணி வைத்து உளவு பிரிவு போலீசார் செயல்பட்டு வருவது இந்த கோஷ்டி மோதலுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். உளவு பிரிவு போலீசார் கஞ்சா விற்கும் கும்பல் யார் என்று தெரிந்தும் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் தங்களது வழக்கமான பணிகளை செய்து வருவதே இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“