/indian-express-tamil/media/media_files/2024/12/16/K2OHBtc7ivcHk3FpdxCh.jpg)
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் பழமையான பத்திரிகையாளர் சங்கமாக சென்னை பிரஸ் கிளப் எனப்படும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இயங்கி வருகிறது. சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த மன்றத்தில் சுமார் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் (தலைவர் பதவி), ஷபீர் அகமது (பொதுச் செயலாளர் பதவி), எஸ்.பி லட்சுமணன் (பொருளாளர் பதவி) ஆகியோர் தலைமையில் ஒரு அணியும், சுரேஷ் வேதநாயகம் (தலைவர் பதவி), அசிப் (பொதுச் செயலாளர் பதவி) தலைமையில் மற்றொரு அணியும், வி.எம் சுப்பையா (தலைவர் பதவி) தலைமையில் இன்னொரு அணியும் களமிறங்கின.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்திரிகையாளர் மன்றத்தில் டிசம்பர் 15 வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பத்திரிகையாளர்கள் வாக்களித்தனர். இரவோடு இரவாக வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. எண்ணிக்கை நிறைவு பெற்றதும் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, .சுரேஷ் வேதநாயகம், அசிப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பொறுப்புகளுக்கு போட்டியிட்டவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்படி பொதுச் செயலாளராக அஃசீப் முகமது, இணைச்செயலாளராக நெல்சன், பொருளாளராக மணிகண்டன், துணைத் தலைவராக சுந்தர பாரதி மற்றும் மதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட ஸ்டாலின், பழனி, கவாஸ்கர் (ஒற்றுமை அணி),விஜய் கோபால், அகிலா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.