வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக என இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.15) காலை 12 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் பேசுகையில், "சிங்கப்பூர், மஸ்கட், புவனேஷ்வர், டெல்லி, விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்குச் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் செயல்பாட்டுக் காரணங்களால் விமான நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும், குறைவான பயணிகள் வருகை காரணமாக இருக்கலாம். காலை 11 மணி வரை மழை காரணமாக எங்களுக்கு எந்தவிதமான வழித்தடங்களும் தாமதங்களும் ஏற்படவில்லை.
மழையை சமாளிக்க ஆயத்த நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை விமான ஓடுபாதை பாலம் அருகே அடையாறு ஆற்றில் நீர்மட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெள்ளம் காரணமாக பயணிகள் முனையத்தில் தங்க வேண்டியிருக்கும் போது போதுமான உணவுப் பொருட்களை வழங்க நாங்கள் சேமித்து வைத்துள்ளோம்," என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, கனமழை எதிரொலியாக பல்வறு நகரங்களில் இருந்து வர வேண்டிய 14 விமானங்கள் சென்னைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் மோசமான வானிலை போன்ற காரணிகளால் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“