Advertisment

Chennai Rains News Live Updates: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வரும் நிலையில், சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Rains Alert Live Updates tamil nadu coimbatore madurai weather today

சென்னை மழை

Advertisment

வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னையில் நேற்று முதல் மழை தொடங்கியது. இரவில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை நிலவரம் லைவ் அப்டேட்ஸ் ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu Chennai Rains, Weather Today Live Updates:

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 13.23 அடியாக உள்ளது. தற்போது சென்னை குடிநீருக்காக 109 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகள் போல் மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 15, 2024 23:44 IST
    9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

    சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, மற்றும் புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற அறிவுறுத்தபட்டுள்ளது. இதேபோல், நாகை, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தபட்டுள்ளது. 

    பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



  • Oct 15, 2024 22:28 IST
    சென்னையில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது – உதயநிதி

    சென்னையில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. பாலங்கள் மீது கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் அதிகாரிகள் விடிய விடிய கள ஆய்வில் உள்ளனர் சாலைகளில் விழுந்த 16 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 45,000 எண்ணிக்கையில் காலை, மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Oct 15, 2024 22:24 IST
    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

    சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்



  • Oct 15, 2024 21:38 IST
    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கில் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது



  • Oct 15, 2024 21:03 IST
    கோயம்பேடு பகுதியில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்

    கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்



  • Oct 15, 2024 20:51 IST
    கனமழை; 8 ரயில்கள் ரத்து

    கனமழை காரணமாக சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது



  • Oct 15, 2024 20:48 IST
    விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    தொடர் மழையையொட்டி விழுப்புரத்தில் நாளை (அக்டோபர் 16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது



  • Oct 15, 2024 20:21 IST
    மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை 16, 17 தேதிகளில் ரத்து

    நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை வரும் 16, 17 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது



  • Oct 15, 2024 19:55 IST
    'தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது' - ஆளுநர் ரவி

    "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது”  என்று சேலத்தில் ஆளுநர் ரவி கூறியுள்ளார். 



  • Oct 15, 2024 19:53 IST
    நீலகிரி மலை ரயில் 2 நாட்கள் ரத்து 

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து (அக்.16, 17) 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 



  • Oct 15, 2024 19:52 IST
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு  

    தொடர் மழையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   



  • Oct 15, 2024 19:34 IST
    சேலம் மாவட்டத்தில் நாளை விடுமுறை 

    தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 15, 2024 19:34 IST
    சென்னை: பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் இயங்காது

    கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் நாளை (அக். 16) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



  • Oct 15, 2024 19:21 IST
    மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு 

    தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • Oct 15, 2024 18:56 IST
    புகார்கள் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை: மேயர் பிரியா பேட்டி

    சென்னையில் தொடர் மழை காரணமாகவே சில இடங்களில் மழைநீர் வடியவில்லை; வேளச்சேரியில் மட்டும்தான் முன்னெச்சரிக்கையாக படகுகள்; மற்ற இடங்களில் தற்போது வரை தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.



  • Oct 15, 2024 18:33 IST
    ரயில் நிலையங்கள் இடையே மழைநீர்: ரயில் புறப்படுவதில் மாற்றம்

    பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த 6 ரயில்கள் பெரம்பூர், சென்னை கடற்கரை, ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Oct 15, 2024 18:29 IST
    கனமழை எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

    கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார். மழை காரணமாக இன்றும், நாளையும் அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 15, 2024 17:24 IST
    குடியிருப்பு பகுதியில் இருந்து வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரம்

    தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள வேம்புலியம்மன் கோயில் தெருவில் 500க்கும் மேற்மட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர், மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டது.



  • Oct 15, 2024 17:00 IST
    சென்னையில் கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு

    சென்னையில் கனமழையை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களுக்கு ரூ. 15 லட்சம் வீதம் ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Oct 15, 2024 16:45 IST
    சென்னை ஆர்.கே. நகரில் மார்பளவு தேங்கிய மழை நீர்: பொதுமக்கள் பாதிப்பு

    சென்னை ஆர்.கே. நகரில் மழை நீர் மார்பளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



  • Oct 15, 2024 16:43 IST
    கனமழை எச்சரிக்கை: அரசு பணியாளர்களுக்கு முன் அனுமதி அளித்து உத்தரவு

    சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கக்பபட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், 4 மணிக்கே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தலைமைச் செயலக பணியாளர்களுக்கு, தமிழக அரசு முன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.



  • Oct 15, 2024 16:40 IST
    கனமழை எச்சரிக்கை: சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கக்பபட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு



  • Oct 15, 2024 16:38 IST
    வீடுகளில் புகுந்த மழை நீர்: சென்னை மேற்கு மாம்பலம் மக்கள் பாதிப்பு

    சென்னை மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை முழுவதும் தேங்கியுள்ள மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக  500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.



  • Oct 15, 2024 16:34 IST
    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்!



  • Oct 15, 2024 15:30 IST
    சுமார் 20 மணி நேரம் தொடர் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தகவல்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து கரையைத் தொடும் போது கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை அதிகாலையில் இருந்து மாலை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய தினம் சுமார் 20 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் எனவும், கடந்த ஆண்டை போன்று கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



  • Oct 15, 2024 15:11 IST
    சென்னை அரும்பாக்கம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    சென்னையில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அரும்பாக்கம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழை பாதிப்பு, சீரமைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மழை நீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 



  • Oct 15, 2024 15:08 IST
    வெள்ளத்தில் மூழ்கிய துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலை

    சென்னையில் கனமழை பெய்துவருவதால், துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலையில் வெள்ள நீர் இருந்தாலும் வாகனங்கள் நீந்திச் செல்கின்றன. சில வாகனங்கள் ஆங்காங்கே நிற்கின்றன.



  • Oct 15, 2024 15:06 IST
    சென்னை உயர் நிதிமன்ற நுழைவாயிலில் மழை நீரை உடனுக்குடன் அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

    சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலில்  தேங்கி நிற்கும் மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.



  • Oct 15, 2024 15:02 IST
    சென்னையில் மழைநீர் தேங்க காரணம் என்ன - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்

    சென்னையில் மழைநீர் தேங்க காரணம் என்ன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில், 6,000 சதுர கி.மீ பரப்பளவில் பெய்யும் மொத்த மழையும் நான்கு வழிகளில் (எண்ணூர், நேப்பியர் அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம்) மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையைத் தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் 1 நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் பள்ளிகரணை, புளியந்தோப்பு, முடிச்சூர், போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும். 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காகப் போடப்படுவது 40 செ.மீ அளவு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலைப் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.



  • Oct 15, 2024 14:55 IST
    கனமழை எதிரொலி: சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்கள் தாமதம்

    கனமழை காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வரும் விமானங்களி சேவை தாமதமாகி உள்ளன.



  • Oct 15, 2024 14:13 IST
    வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை மையம் அறிவிப்பு

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.



  • Oct 15, 2024 14:09 IST
    சென்னையில் கனமழை; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது - உதயநிதி ஸ்டாலின் உறுதி

    தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தையும் நேரில் ஆய்வு செய்து, நிலைமை குறித்து கூறியதுடன், சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    மழை நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ​​“சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நிலைமை மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் சுமார் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. “சுமார் 8 பகுதிகளில் மரம் விழுந்து கிடக்கிறது, அதை அகற்றும் பணியில் குழு ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. மழை ஓய்ந்த பிறகு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும். என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப்-ன் 26 குழுக்கள் சென்னை மற்றும் அனைத்து கடலோரப் பகுதிகளிலும் உடனடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் இரண்டு சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது” என்று துணை முதல்வர் தெரிவித்தார். (ANI)



  • Oct 15, 2024 14:02 IST
    சென்னையில் கனமழையால் ஓ.எம்.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஓ.எம்.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.எஸ்.ஆர்.பி டூல்ஸ் முதல் கந்தன்சாவடி வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.



  • Oct 15, 2024 13:26 IST
    வடகிழக்கு பருவழை: சென்னையில் இயல்பை விட 81% அதிகம் - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவழை இயல்பை விட 84% அதிகம் பெய்துள்ளது; சென்னையில் 81% அதிகம் பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 15, 2024 13:23 IST
    “மழையிலும் வந்து பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள்” - எஸ்.வி.சேகர்

    சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,  தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் எஸ்.வி. சேகர், மழையிலும் வந்து பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.



  • Oct 15, 2024 12:50 IST
    சென்னையில் நாளை அதிகனமழை; பிரதீப் ஜான் எச்சரிக்கை

    சென்னையில் இன்றை விட நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்



  • Oct 15, 2024 12:34 IST
    5 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்

    சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பெரம்பூர் ரயில்வே, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், துரைசாமி, மேட்லி ஆகிய 5 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன



  • Oct 15, 2024 12:32 IST
    வடசென்னை பகுதியில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

    மழை நிலவரம், முன்னேற்பாடுகள் குறித்து வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்



  • Oct 15, 2024 12:31 IST
    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை தொடரும்; வானிலை ஆய்வு மையம்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை தொடரும்; சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Oct 15, 2024 12:12 IST
    சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்

    சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பெரம்பூர் இரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன 



  • Oct 15, 2024 11:59 IST
    பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் அறிவிப்பார் - உதயநிதி

    பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் அறிவிப்பார். ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Oct 15, 2024 11:47 IST
    புரசைவாக்கம் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்கு சாலைகளில் மழைநீர்

    சென்னை, புரசைவாக்கம் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்கு சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தாண்டவராயன், வடமலையான் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது



  • Oct 15, 2024 11:45 IST
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்; வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Oct 15, 2024 11:42 IST
    கனமழை; அண்ணா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

    சென்னையில் பெய்துவரும் கனமழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அண்ணா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது



  • Oct 15, 2024 11:41 IST
    10 மாவட்டங்களில் 26 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் தயார்

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 26 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன 



  • Oct 15, 2024 11:23 IST
    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்ட உதயநிதி

    தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார். 

    சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.

    பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும்.

    300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளன. 

    கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர சென்னையில் உள்ள 20 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. மழை நின்றவுடன் இவ்விரு சுரங்கப்பாதைகளும் சரிசெய்யப்படும்.

    300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை.

    கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

    சென்னையில் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் தயாராக உள்ளனர்.



  • Oct 15, 2024 10:58 IST
    கோவையில் கனமழை; செந்தில் பாலாஜி ஆய்வு

    கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி ,கதிரவன் லே - அவுட் பகுதியில் ஆய்வை மேற்கொண்டார் 



  • Oct 15, 2024 10:57 IST
    அவசரக்கால செயல்பாடு மையத்தில் உதயநிதி ஆய்வு

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக்கால செயல்பாடு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்



  • Oct 15, 2024 10:43 IST
    சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

    சென்னையில் தி.நகர், பாரிமுனை, பல்லாவரம், புளியந்தோப்பு, தரமணி, எம்.ஜி.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது



  • Oct 15, 2024 10:27 IST
    ஆன்லைன் வகுப்புகள் கூடாது

    கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளது. 

    கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.



Tamilnadu Tamilnadu Weather Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment