தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆறு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 ஆம் தேதிகளில் நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.11) அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாகை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமை (நவ.12) நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தகவலின் படி, நவ.7 மதியம் 12 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கத்தில் 20.61 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கத்திற்கு 19 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 713 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில்18.73 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 165 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 292 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“