/tamil-ie/media/media_files/uploads/2018/08/a272.jpg)
பசுமை வழிச்சாலை திட்டம்
பசுமை வழிச்சாலை திட்டம்: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள முடியாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை- சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்,நில உரிமையாளர் கிருஷ்ண மூர்த்தி, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன என சுட்டிகாட்டினர். மேலும் நில கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அரசு நடத்தவில்லை என குற்றம் சாட்டினர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என்றும் விதிகள் பின்பற்றப்படவில்லை என வாதிட்டனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சட்டப்படி யே நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டார். மேலும், அரசு அனைத்து விதிகளையும் மீறும் என யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்த அவர், நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற முடியாது என தெரிவித்தார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.