/indian-express-tamil/media/media_files/2025/08/23/chennai-sanitation-worker-dies-of-electrocution-rs-20-lakh-compensation-announced-tamil-news-2025-08-23-11-24-25.jpg)
சென்னை கண்ணகி நகரில் பணிக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது. தரமணி, அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, துரைப்பாக்கம் செல்லும் சாலைகளில் மழை நீா் தேங்கியது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.
இதனிடையே, சென்னை கண்ணகி நகரில் பணிக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. தூய்மைப் பணிக்காக சென்ற போது இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே வரலட்சுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா். இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.