/indian-express-tamil/media/media_files/2025/08/09/sekar-babu-chennai-2025-08-09-15-02-28.jpg)
Chennai sanitation workers protest privatization Minister Sekarbabu Chennai Press Club
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 11 மண்டலங்களில் ஏற்கனவே தூய்மைப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த ராயபுரம், திரு.வி.க நகர் போன்ற பகுதிகளும் தற்போது தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. இதுவே தூய்மைப் பணியாளர்களின் கொதிப்புக்கு முக்கிய காரணம். மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களாக மாதத்திற்கு ரூ.22,950 பெற்று வந்த இவர்களுக்கு, தனியார் நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்தால் ரூ.16,950 மட்டுமே ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஊதியக் குறைப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு குறித்த அச்சமே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராட்டத்தில் இறங்க அவர்களைத் தூண்டியுள்ளது.
இந்தப் போராட்டத்தால் ராயபுரம், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகள் சேகரிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்படாததால், சாலைகளும் குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து இந்தப் போராட்டம் நீடித்தால், சுகாதாரச் சீர்கேடுகள் பெரிய அளவில் உருவாகும் அபாயம் உள்ளது.
இந்த நெருக்கடியைச் சரிசெய்யும் நோக்கில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக, பேச்சுவார்த்தையின்போது முதலமைச்சரின் குடும்பத்தையே திட்டுகிறீர்களா, அதிமுக அரசாக இருந்திருந்தால் வேறு மாதிரி நடந்திருக்கும் என அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து இரு தரப்பினரும் வெளியேறினர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியார்களை மிரட்டும் வகையில் பேசிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு சென்னை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஓருவாரத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கிளில் பதிவிட்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியார்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய @Neelam_Culture சேர்ந்தவரை மிரட்டும் வகையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.
— Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) August 9, 2025
பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஓருவாரத்திற்கு மேல்...
நேற்று இரவு, போராடும் தொழிலாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்தவரை நோக்கி அமைச்சர் சேகர்பாபு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், தவறான முன்உதாரணத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ஆகவே, அமைச்சர் சேகர்பாபுவின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிப்பதுடன் இனி இதுபோல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது’, என்று சென்னை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us