சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காக,, மாநில அரசு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் செய்யாறு உள்ளிட்ட 6 இடங்களை தேர்வு செய்து அளித்துள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதன் அவசியத்தை உணர்ந்த மாநில அரசு, அதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. இதற்காக, மாநில அரசு, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இரண்டாவது விமானநிலையத்தை அமைப்பதற்காக, திருப்போரூர், வல்லத்தூர், தோடூர், செய்யாறு, மதுரமங்கலம் மற்றும் மப்பேடு உள்ளிட்ட ஆறு இடங்களை தேர்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் மாநில அரசு வழங்கியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து தொலைவு
திருப்போரூர் - 40 கி.மீ
மப்பேடு - 46 கி.மீ
வல்லத்தூர் - 70 கி.மீ
செய்யார் - 90 கி.மீ
தோடூர் - 55 கி.மீ
மதுரமங்கலம் - 55 கி.மீ.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா உயரதிகாரி கூறியதாவது, புதிதாக அமையவுள்ள விமானநிலையம் 2 ஆயிரம் முதல் 2,500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. மாநில அரசு தற்போது வழங்கியுள்ள 6 இடங்களில் ஒரு இடத்தில், தாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்தோம். சில தொழில்நுட்பகாரணங்களால், அந்த இடத்தை நாங்கள் தவிர்த்துவிட்டோம். இடத்தை தேர்வு செய்தபின்னர், 2 ஆண்டுகளில், விமானநிலையம் முழுபயன்பாட்டிற்கு வரும். இதன்மூலம், விமானநிலையத்தில் பயணிகளின் சேவை 18 மில்லியன் என்ற அளவில் இருந்து 35 மில்லியன்களாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இட தேர்வுக்கு பின்னர், சில ஒப்புதல்கள் பெறப்பட உள்ளன. அந்த நடைமுறைகள் முடிந்தவுடன், மாநில அரசால் கையகப்பட்டுத்தி வழங்கப்பட்ட நிலத்தில், புதிய விமான நிலையம் கட்டுமான பணிகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.