சென்னையின் இரண்டாவது விமான நிலையம், திருப்போரூரில் அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் உள்ள டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேசனல் டெர்மினல்களில் அதிகளவு பயணிகளின் வருகையை தொடர்ந்து, சென்னையின் இரண்டாவது விமானநிலையம் கட்ட ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநில அரசிடம் இடத்தை தேர்வு செய்து தருமாறு கோரியிருந்தது.
இதனையடுத்து, மாநில அரசு இடத்தேர்வு நடவடிக்கைகளில் களமிறங்கியது. திருப்போரூர், மப்பேடு, மதுரமங்கலம், செய்யாறு, தோடூர் மற்றும் வலத்தூர் என ஆறு இடங்களை தேர்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் வழங்கியது.
திருப்போரூர் பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசு நிலம் என்பதால் எவ்வித பிரச்னையும் வராது என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆய்வு : மாநில அரசின் கோரிக்கையை தொடர்ந்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரிகள் அடங்கிய குழு, திருப்போரூரில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், திருப்போரூரில், இரண்டாவது விமானநிலையம் அமைய வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் இதுதான் : திருப்போரூர், கல்பாக்கம் அணுசக்தி நிலையத்துக்கும், தாம்பரம் விமானப்படை தளத்திற்கும் அருகே அமைந்துள்ளது. இது பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி விடும். இங்கு விமானநிலையம் அமைக்கப்பட்டால், தாம்பரம் விமானப்படை தளத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள், விமான ஓடுதளம் அமையும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாகவே, திருப்போரூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்தை, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மற்ற இடங்களான மப்பேடு, மதுரமங்கலம், செய்யாறு, தோடூர் மற்றும் வலத்தூர் உள்ளிட்ட ஏதாவதொரு இடத்தில் சென்னையின் இரண்டாவது விமானநிலையம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.