போலி ஆவணங்கள் பயன்படுத்தி அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை, அபகரித்தாக தொடரப்பட்ட நில மோசடி வழக்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேரில் ஆஜராக வேண்டும் என்றும், மே 23-ந் தேதிக்குள் ஆஜராகவில்லை என்றால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மருத்துவத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன், சென்னை மேயராக இருந்த காலக்கட்டத்தில், சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில், கே.எஸ்.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தனது மனைவி காஞ்சனா பெயருக்கு சட்டவிரோமாக மாற்றியதாக, பார்த்திபன் என்பவர் சென்னை காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ், மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது, சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.பி.எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி ஜெயவேல் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இதனிடையே, தன் மீதான இந்த நில மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மா.சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்நது கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மா.சுப்பிரமணியன் அவரது மனைவி நேரில் ஆஜராகவில்லை. அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மே 6-ந் தேதி மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனா ஆகிய இருவரும் இன்றும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வழக்கை வரும் மே 23-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஜெயவேல், அனறைய தினம் மா.சுப்பிரமணியன் ஆஜராகவில்லை என்றால், குற்றவழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.