கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீராங்கனைக்கு தவாறான சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரியா, தேசிய அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சியின் போது ஏற்பட்ட மூட்டுவலி காரணமாக சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அவருக்கு மூட்டில் வலி இருந்துள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காலில் ரத்த ஓட்டம் இல்லை என்றும் அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உயிரை காக்க காலை அகற்ற சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், பிரியா கடந்த 15-ந் தேதி திடீரென மரணமடைந்தார்.
இந்த மரண செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெரியார் நகர் மருத்துவமனையில், பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்தாக கூறி மருத்துவர் பால்ராம்சங்கர், சோமசுந்தர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், பிரியாவின் மரண வழக்கில் இருந்து தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, மருத்துவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மனுவில், இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை இதற்கு முன்பு வெற்றிகரமாக செய்துள்ளோம். தங்கள் அறுவை சிகிச்சை செய்த பலரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர். அதே சமயம் மாணவி பிரியா உயிரிழந்தது துரதிஷ்டவசமானது. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழு ஆஜராகவேண்டி உள்ளது.
எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். சாட்சிகளை கலைக்கமாட்டோம். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும், வேண்டுமானால் சரண் அடையுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் சரணடைவதற்கு காவல் நிலையம் செல்வதே ஆபத்தாக உள்ளது, இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவி பிரியா மரண விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.