Tamil cultural receptions to Chinese President Xi jinping: அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
சென்னை வந்து இறங்கும் சீன அதிபருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார்.
சீன அதிபரும் இந்திய பிரதமர் மோடியும் சந்திப்பதையொட்டி, சென்னையும் மாமல்லபுரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 15000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கும் ஓட்டலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் அவர் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழி நெடுக பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு சீனவிலிருந்து வந்துள்ள பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இரு நாட்டு பிரதமர்களின் வருகையால், சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலையத்துக்கு வருபவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
சீன அதிபரை வரவேற்கும் விதமாக பழைய விமான நிலையத்தின் 5-வது நுழைவாயில் வாழைமரம் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதோடு பசுமை புல்வெளியுடன் புதிதாக பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் கிண்டியின் சோழா ஹோட்டல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பள்ளி மாணவர்கள் நின்று, சீன அதிபரை வரவேற்கிறார்கள்.
இதே போன்று ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை 34 இடங்களில் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை கவனிக்க 10 சிறப்பு அதிகாரிகளையும், 34 ஒருங்கிணைப்பாளர்களையும் தமிழக அரசு நியமித்துள்ளது.
இருபெரும் தலைவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மோடி - ஜி ஜின்பிங்கை வரவேற்று பனை ஓலையால் மாமல்லபுரத்தில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சீன அதிபரை வரவேற்று தமிழ், இந்தி, மற்றும் சீன மொழியில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.