காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் (பசுமை விமான நிலையம்) அமைக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தது. ரூ. 20,000 கோடி மதிப்பீட்டில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 2ஆம் தேதி தெரிவித்தார்.
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்தவகையில் நேற்று (அக்டோபர் 2) ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
அந்த தீர்மானத்தில், "பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை குடியிருப்பாளர்களாகிய நாங்கள் ஒருமனதாக எதிர்க்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட அதிக பணம் வழங்கப்படும் என திமுக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. இருப்பினும் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளம், டாக்ஸிவேகள், விமான நிறுத்துமிடம், சரக்குகள் கையாலும் முனையம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil