cyclone fani latest news: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபனி புயல், தமிழகத்தில் கரையைக் கடக்காது என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. 300 கி.மீ தொலைவு வரை அது தமிழகத்தை நெருங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று (ஏப்ரல் 29) பிற்பகலில் அளித்த பேட்டி வருமாறு: ‘ஃபனி புயல் சென்னைக்கு தென் கிழக்கே 870 கி.மீ தொலைவில் உள்ளது. அது, வட மேற்கே நகர்ந்து வட தமிழகம், மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையோரம் 300 கிமீ தூரம் வரை வரக்கூடும்.

Cyclone Fani And Chennai Weather: இன்றைய வானிலை நிலவரம்
புயல் காரணமாக ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழியும். நாளை (30-ம் தேதி) காலையில் 40 முதல் 50 கிமீ வேகத்திலும், மாலையில் 60 கி.மீ வரையிலும் வட தமிழகப் பகுதிகளில் காற்று இருக்கக்கூடும்.
தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் ஏப்ரல் 29, 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.