Chennai weather latest updates holiday declared for schools in 8 districts : தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்ற காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உண்டு. குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸும் நிலவக் கூடும். அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று நள்ளிரவு முதல் டி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, மயிலாப்பூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்தாலும் பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகமான மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
திருவாரூர் மெயின் பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காஞ்சியின் மாமல்லபுரம், திருவாரூரின் வலங்கைமான் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கடலூரில் நெய்வேலி, விழுப்புரத்தின் வானூர், காஞ்சியின் மதுராந்தகம், திருவாரூரின் குடவாசல் ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நன்னிலம், கடலூர், மாதவரம், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், மன்னார்குடி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, திருவையாறு, செங்குன்றம், சீர்காழி ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : வட தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை… தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை
லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், குமரிக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து லட்சத்தீவுகளை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும். இந்த பகுதிகளுக்கு யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.