Chennai weather latest updates Vellore records historical rainfall : இம்முறை தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் ஒரு கை பார்த்துள்ளது தென்மேற்கு பருவமழை. நீலகிரியின் அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செ.மீ. மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையில் பதிவான அதிகபட்ச மழையின் காரணமாக உதகை, மற்றும் வால்பாறை பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அணைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகின்றது. மேலும் பாசனத்திற்காக பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Chennai weather latest updates Vellore records historical rainfall
மிகவும் குறைவான மழைப்பொழிவை எப்போதும் பெறும் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவிட்டது. ஆம்பூர் பகுதியில் ஊட்டல் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து வேர்கடலை போன்ற பயிர்கள் முற்றிலும் நாசம் அடைந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
வேலூரின் அலங்கயத்தில் 15 செ.மீ , திருப்பத்தூர் 10 செ.மீ மழை, வாணியம்பாடியில் 9 செ.மீ மழை, ஆம்பூரில் 8 செ.மீ மழை. திருப்பத்தூரில் 7 செ.மீ மழை என வரலாறு காணாத மழை வேலூரில் பெய்ந்துள்ளது.
விழுப்புரம் செஞ்சியில் அதிக பட்சமாக 14.5 செ.மீ மழையும், திருக்கோவிலூரில் 14.2 செ.மீ மழையும், விழுப்புரம் மெயினில் 13.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 7.6 செ.மீ மழையும் வந்தவாசியில் 6.4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இன்று மழைக்கான வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புதுவைக்கு இடையே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
அணைகளில் இருந்து நீர் திறப்பு
கடந்த வாரம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
18ம் தேதி ஆழியாறில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று (19/08/2019) தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 9024 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.