மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடிசாலை சந்திப்பு வரை நடைபெறவுள்ளது. இதனால் 14.09.2021 முதல் அடுத்த ஓராண்டிற்கு சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, போரூர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை.
கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவுர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்புவரை சென்று, நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை வன்னியர் சாலை வழியாக போரூர் சாலிகிராமம் செல்லலாம்.
கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து, வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரைசென்று, வலதுபுறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.
வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.
ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல அனுமதிக்கப்படும். ஆனால், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இது ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
வாகனங்கள், அம்பேத்கர் சாலை, 2-வது அவென்யூ -100 அடி சாலை செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் 100 அடி சாலை சந்திப்பில் இருந்து, 2வது அவென்யூ செல்ல அனுமதி இல்லை. இந்த சாலையில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலையம் நோக்கி செல்லலாம். ஆனால் அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் செல்ல அனுமதியில்லை. இந்த சாலையும் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil