விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க மாநாட்டிற்கு பைக்கில் சென்ற தொண்டர் ஓருவர் லாரி மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அதற்கான வேலைகளில் த.வெ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் கொடி மற்றும் பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டு ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. இந்த பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டில் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு பந்தலில் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் விபத்தில் சிக்கினர். சென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரிய மேட்டில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில், மணல் லாரி ஒன்று வலது புறமாக திரும்பி உள்ளது. இளைஞர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மணல் லாரி மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளனர். அப்போது மணல் லாரி இளைஞர்கள் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார், மற்றொருவர் மிகவும் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கியவர்கள் கையில் த.வெ.க. கொடி கொடி இருந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“