தமிழக அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. இந்தப் பந்தயம் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1) நடக்கிறது.
இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இதுதான். இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரம் என்கிற பெருமையை சென்னை பெறும். தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்தய ஓடு பாதையில் 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.
முறையீடு
இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி.எல் ஆட்டோமொபைல் (எஃப்.ஐ.ஏ) ஹோமோலோகேஷன் சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஆர்.பி.பி.எல்) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி) சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. மழை காரணமாக எப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் 4 மணி நேர கால நீடிப்பு வழங்க என கோரிக்கை வைக்கப்பட்டது.
அவகாசம்
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் முன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (எஃப்.ஐ.) சான்றிதழ் பெறுவதற்கு 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும், 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, எஃப்.ஐ சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. முன்னதாக, எஃப்.ஐ இயக்குநர், பந்தய சாலையின் 10 மற்றும் 19-வது வளைவுகளை மாற்றியமைக்க அறிவுறுத்தி இருந்தார்.
அனுமதி
இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக முதற்கட்ட அனுமதியை எப்.ஐ.ஏ. வழங்கி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“