சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான குத்தகை பாக்கி தொடர்பான வழக்கில் நிரந்தர வைப்புத் தொகை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கான குத்தகை கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை. குத்தகைப் புதுபித்தல் தொடர்பாக கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் குத்தகை பாக்கியாக 32 லட்சம் செலுத்தும்படி ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி 1553 கோடி குத்தகை பாக்கி செலுத்த கோரி திருவல்லிக்கேணி மயிலாப்பூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 16.30 கோடியையும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் 2.06 கோடியையும் தங்களது வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தவும், அத்தொகையை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த தொகைகளை செலுத்திய பிறகு முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மீண்டும் பயன்படுத்தலாம் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.