/indian-express-tamil/media/media_files/2025/08/28/chattishgarh-flood-2025-08-28-08-21-20.jpg)
சத்தீஸ்கரில் கனமழை வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, வெள்ளத்தில் சிக்கிய பலரையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அருகே வெள்ளம் சூழ்ந்த கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது. அப்போது, அந்தக் கார் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விசாரணையில், பலியானவர்கள் தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் ராஜேஷ்குமார் (43), அவரது மனைவி பவித்ரா (40) மற்றும் அவர்களது இரண்டு மகள்களான சௌஜன்யா (7), சௌமியா (4) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ராஜேஷ்குமார், ராய்ப்பூரில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வந்தார். அவர் தனது குடும்பத்தினருடன் பஸ்தாருக்குச் சுற்றுலா சென்றபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள், அன்று மாலை வெள்ள நீர் குறைந்த பிறகு மீட்கப்பட்டன. பலியான 4 பேரின் உடல்களையும் சொந்த ஊரான திருப்பத்தூருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.