New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/s18.jpg)
கதம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி லாவண்யா என்பவர் அங்கு முதுகலை விவசாயம் படித்து வந்தார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூரைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி லாவண்யா என்பவர் அங்கு முதுகலை விவசாயம் படித்து வந்தார். அவர், அங்குள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், லாவண்யா இன்று காலை 10 மணியளவில் விடுதியில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோட முயன்றார். உடனே மாணவி லாவண்யா கூச்சல்போட்டு அலறியதால், அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதன்பின், அவரை அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, ரத்தவெள்ளத்தில் கிடந்த லாவண்யாவை மீட்ட மற்ற மாணவிகள் அவரை சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டியைச் சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.