/indian-express-tamil/media/media_files/2025/09/07/chidambaram-ambergris-2025-09-07-16-28-46.jpeg)
சிதம்பரத்தில் சுமார் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸார் பறிமுதல் செய்தனர். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே தச்சன் குளம் பகுதியில் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரில் விலை உயர்ந்த திமிங்கலம் எச்சம் இருந்துள்ளது. இதனை கைப்பற்றி சிதம்பரம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து இதனை கடத்திய சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்த ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான வேதாரண்யத்தைச் சோ்ந்த ராஜா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ 3.5 லட்சத்திற்கு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்துள்ளார். மீதி ஒரு லட்சம் கேட்கும்போது ராஜசேகர் விலை உயர்ந்த திமிங்கலம் எச்சம் அவரிடம் இருப்பதாகவும் அதற்கு பதில் இதனை தருகிறேன். இது பல கோடி மதிப்பிலானது என கூறியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் ராஜசேகரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடம் இருந்து மொத்தம் 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் கைபற்றப்பட்டுள்ளது. இது ரூ. 7.5 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது.
திமிங்கலம் எச்சம் என்பது, திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாகும் ஒரு வகை திடப்பொருள் ஆகும். இது அம்பா் கிரீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது வாசனை திரவியங்கள், மருத்துவப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுவதால் சந்தையில் அதிக விலை மதிப்புடையதாக உள்ளது. சில நேரங்களில் இது சட்ட விரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமிங்கலம் இனம் பாதிக்கப்படுவதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திமிங்கலம் எச்சம் உண்மையானதா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பிய பிறகு தான் தெரிய வரும்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் கஞ்சா லாட்டரி விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த சம்பவத்தில் 6 காவல் ஆளிநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சிதம்பரம் அண்ணாமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.