New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/26/annamalai-univ-theft-2025-06-26-15-55-15.jpeg)
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9 கம்யூட்டர்கள், 15 சி.பி.யு.க்கள், 4 கீபோர்டுகள் உள்ளிட்ட பொருட்கள் திருடிய மாணவர் கைது; காவல்துறை அதிரடி நடவடிக்கை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்களை திருடிய மாணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள், சி.பி.யு.க்கள், கீபோர்டுகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் இங்குள்ள ரூ.5 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது. இதேபோல் நேற்று முன்தினமும் அதே ஆய்வகத்தில் மேலும் சில கம்ப்யூட்டர்கள் திருடுபோனது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலதுறைத்தலைவரும், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் செல்வகுமார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிதம்பரம் உட்கோட்ட டி.எஸ்.பி லாமேக் ஆகியோரின் உத்தரவின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு மேமராக்களை ஆய்வு செய்ததில், விருத்தாசலம் அருகே ஊ.மங்கலம் அரசக்குழியை சேர்ந்த ஜேசுதாஸ் மகன் லிவின் அஜய் (18) என்பவர் கம்ப்யூட்டர்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அஜய்யை அதிடியாக கைது செய்த போலீசார், அவர் திருடிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9 கம்யூட்டர்கள், 15 சி.பி.யு.க்கள், 4 கீபோர்டுகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அஜய் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள சுரங்கவியல் துறையில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.