அமைச்சர் கே.என். நேருவும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ‘கீரியும் – பாம்பும்’ போல இருப்பதாக தி.மு.க.விலேயே சிலர் கூறிவந்தனர்.
அதையெல்லாம் உடைத்தெரிந்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அரசு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4 ஆம் தேதி திருச்சிக்கு வருகிறார்.
இதையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘நேற்று திருச்சியில் மற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலையில் தான் சென்னைக்கு சென்றேன். அப்போது எனக்கு தொலைபேசியில் நம்முடைய கழகத்தினுடைய முதன்மை செயலாளர் கே.என்.நேரு தொடர்பு கொண்டு நாளை மத்திய மாவட்ட செயல் வீரர் கூட்டம் நடைபெற இருக்கின்றது.
நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னார், அப்போது நாளை எனக்கு சென்னையில் 10 மணிக்கு ஒரு நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. அதை முடித்துவிட்டு நாளை இரவு தான் திருச்சி வருவேன் என்று சொன்னேன்.
நீ வந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு கே.என் நேரு போனை கட் செய்துவிட்டார். அடுத்த நிமிடம் எங்களுடைய துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசினேன்.
நான் ஒன்னே ஒன்றுதான் சொன்னேன், தொலைபேசியில் அழைத்தது எங்கள் அண்ணன், முதலில் நம்முடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இரண்டு நாள் தள்ளி வைங்க சொல்லிட்டு மறுபடியும் தொலைபேசியில் கே. என் நேருவை தொடர்பு கொண்டு, அண்ணா நான் கண்டிப்பா நாளைக்கு வந்துவிடுகிறேன் என்று சொன்னேன்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எத்தனை இடங்கள் நாம் வெற்றி பெறுவோம் , அதற்கு எப்படியெல்லாம் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை சொன்னது அப்படியே நடந்தது.
ஏனென்றால் சொன்னவர் ஏதோ ஆறுதல் சொல்பவர் அல்ல, ஆற்றல்மிகு செயலாளர் நம்முடைய அமைச்சர் கே.என். நேரு அண்ணன் அவருடைய அந்த அனுபவம்தான் அவரை சொல்ல வைத்திருக்கின்றது எனத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் என்ன நினைக்கிறது அதுதான் தமிழ்நாடு நினைக்கும் அப்படின்னு அமைச்சர் அண்ணன் சொன்னார். அது உண்மை.
எங்களை பொறுத்த வரைக்கும் எங்களது திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தை பொறுத்தவரைக்கும் நாங்கள் அவரை பார்ப்பது ஒரு துரோணாச்சாரியாக தான் என கூறினார். அமைச்சர் நேரு ஏகலைவன் தான்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கட்சி நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த உழைக்க வேண்டும் ’’என அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil