சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (மே 25) நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சென்னை மாநகர ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்தாஸ் மீனா, சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர். பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை தோறும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“