தத்தெடுக்கப்பட்ட குழந்தை சட்டப்படியான வாரிசு தான் எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், தத்தெதடுக்கப்பட்ட குழந்தைக்கு வாரிசு சான்று வழங்க உத்தரவிட்டது.
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாரிசு சான்றிதழ் பெறுவது சிரமமான காரியமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றின் விவரம் வருமாறு :
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த சந்திரசேகர் - மம்தா தம்பதியர், குழந்தை இல்லாததால், மம்தாவின் சகோதரரின் பெண் குழந்தையை 1994ம் ஆண்டு தத்தெடுத்து, சவுந்தர்யா என பெயர் வைத்து வளர்த்தனர். இந்நிலையில், 2017 ம் ஆண்டு சந்திரசேகர் மரணமடைந்து விட்டார். இதையடுத்து, அவரது சொத்துக்களின் பட்டா பெயர் மாற்றத்திற்காகவும், வங்கி கணக்கு பராமரிக்கவும், சவுந்தர்யாவை, சந்திரசேகரின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பரிசீலித்த தேன்கனிக்கோட்டை தாசில்தாரர், தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு வாரிசு சான்று வழங்க முடியாது எனக் கூறி நிராகரித்தார். இதை எதிர்த்து மம்தாவும், சவுந்தர்யாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, இந்து வாரிசுரிமைச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை, தத்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து தத்தெடுத்தவர்களின் குழந்தையாகவே வளர்கிறது. அதனால் பெற்றெடுத்த குழந்தைகளைப் போல, தத்தெடுத்த குழந்தைக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன. சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தை, சட்டப்படியான வாரிசு தான் எனக் கூறி, சவுந்தர்யாவுக்கு வாரிசு சான்று வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், வாரிசு சான்று கோரிய விண்ணப்பத்தை மீண்டும் சட்டப்படி பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார்.