திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், காரிலேயே குழந்தை பிறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் அருகே புளிச்சக்காடியை சேர்ந்த தம்பதியர் சீனிவாசன் மற்றும் தனலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனலட்சுமிக்கு நேற்றிரவு (திங்கள் கிழமை) பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வாடகை கார் மூலம் திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது, செவிலியர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறியும் அவர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாக உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
காரில் இருந்த தனலட்சுமி பிரசவ வலியால் துடித்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்களும் தெளிவான பதிலை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், சுமார் 45 நிமிடம் கழித்து தனலட்சுமிக்கு காரிலேயே குழந்தை பிறந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்பின்னரே ஸ்ட்ரெட்ச்சரில் தாய் மற்றும் குழந்தையை செவிலியர்கள் மருத்துவமனைக்குள் அனுமதித்தனர். இதனால், பாதுகாப்பற்ற முறையில் காரிலேயே குழந்தை பிறக்க காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Child born in a car in tn government hospital