குழந்தைத் திருமண தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஜாமீன் அல்லது முன் ஜாமீன் வழங்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
கடலுர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்ததாக மகாலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மகாலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி விருதாச்சலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிறுமியின் தந்தை வழி உறவினர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்த போது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். அதனால் மகாலட்சுமிக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்று கொண்ட நீதிபதி, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களின்படி, மாவட்ட நீதிமன்றம் மட்டுமே இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என கூறி, மகாலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உடனடியாக அவரை கைது செய்ய விருதாச்சலம் மகளிர் காவல் ஆய்வாளருக்கும் நீதிபதி
உத்தரவிட்டார்.