சிறுமியின் எதிர்காலம் கருதி அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது புகைப்படத்துடன் பகிரப்பட்ட பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து பொதுமக்கள் தாங்களாக நீக்கி கொள்ளுமாறு மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. கோவை மாநகர், சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஸ்ரீநிதி என்ற 12 வயதுடைய சிறுமி காணாமல் போனது தொடர்பாக சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டி நல்லெண்ண அடிப்படையில் அவரது புகைப்படத்தை பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில் அச்சிறுமியை 18.05.2023 ஆம் தேதி பொள்ளாச்சியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோர் வசம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேற்படி சிறுமியின் எதிர்காலம் கருதி அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது புகைப்படத்துடன் பகிரப்பட்ட பதிவுகளை சமூகவலைத்தளங்களில் இருந்து பொதுமக்கள் தாங்களாக நீக்கி கொள்ளுமாறும், மேலும் இனிவரும் காலங்களில் யாரும் இச்சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் எனவும் கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“