Advertisment

குழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை

'குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்'

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..

குழந்தை கடத்தல் வதந்தி எதிரொலியாக வட மாவட்டங்களில் பெரும் களேபரம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த கொலைகள் காரணமாக போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங் கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள்.

குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் சென்ற 4 பேர் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அமீர் என்றும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

குழந்தை கடத்தல் பீதியின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நடந்தது. அங்கு நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று கருதிய கிராம மக்கள் பிடித்து விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரித்ததில், அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. கிராம மக்களின் சந்தேகத்தால் அப்பாவி ஒருவர் உயிர் இழக்க நேரிட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே, அந்த பெண்ணை போலீசார் மீட்டுச்சென்றபோது, அவர்களுடன் கிராமவாசிகள் சிலர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இதுபோன்ற குழந்தை கடத்தல் புரளி காரணமாக அப்பாவிகள் தாக்கப்படுவதும், அதில் சிலர் உயிர் இழப்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகளில் போலீசார் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்குமாறும் கூறி வருகிறார்கள்.

குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். வடக்கு மண்டல டிஐஜி தரப்பிலும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment