வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன். ஆனால் அதற்கான ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
மீ டூ விவகாரத்தை ஒட்டி தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்திதத்து. இதில் திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “2005, 06 க்கு பிறகு அவரது புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அழைத்தார். அதில் முதல்வர் சிறப்பு விருந்தினர் என்பதால் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் சென்றேன். எனது திருமணத்துக்கு வைரமுத்துவை காரணம், கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா? என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக்கொண்டு சென்று பத்திரிகை வைத்தேன்.
திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது.
அதன் பின்னர் திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை வைரமுத்து அழைத்தார். என்னால் வரமுடியாது என்று மறுத்தேன். காரணம் எனக்குத் திருமணமாகி இருந்தது. என் பக்கம் மாமனார் மாமியார் துணை இருந்ததால் வரமுடியாது என்று மறுத்தேன். அன்று எனக்கு கணவர் வீட்டார் துணை இருந்ததால் தைரியமாக நின்றேன்.
ஆண்டாள் சர்ச்சை குறித்து நான் ஒரு ட்வீட் கூட போடவில்லை. நான் ஒரு விஷயமும் சொல்லவில்லை. மற்றவர்கள் என்னை வைத்து அரசியல் நடத்தினால் என் தப்பு இல்லை. என் பிரச்சினை எனக்கு நடந்த விஷயம் அது. நான் என்ன செய்ய முடியும்?. எனக்கு இது ஏன் என்று புரியவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.
இதில் வலது, அதி தீவிர வலது, இடது, அதி தீவிர இடது, பொதுவில் இருப்பவர்கள் அத்தனை ஆண்களும் இதில் சிக்கியுள்ளனர். அனைவர் மீதும் புகார் வருகிறது. இதில் அமைச்சர், பத்திரிகையாளர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் இலக்காகியுள்ளனர். ஆகவே இதை அரசியல் ஆக்காதீர்கள். பெண்கள் தங்கள் பிரச்சினைக்காக வெளியே வந்தால் அவரை அனைவரும் பின்னோக்கித் தள்ளும் வேலையைத்தான் செய்கிறார்கள்.
வைரமுத்து பற்றி பொதுவெளியில் இப்போதுதான் சொல்கிறேன். ஆனால் எனது தோழிகளிடம் எப்போதோ சொல்லிவிட்டேன். அவர் சரியான ஆள் கிடையாது, தவறான ஆள் என்று பெண்களான எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆண்களான உங்களுக்குத்தான் தெரியாது. வைரமுத்து மீது கண்டிப்பாக வழக்கு தொடுப்பேன்.
2004 அல்லது 05-ம் ஆண்டா என்பது குறித்த சரியான தகவல் எனது ஞாபகத்தில் இல்லை. நான் போய் வந்த பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் உள்ளது. அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு ஆதாரம் அந்த பாஸ்போர்ட்டில் உள்ளது. அது எங்கே இருக்கிறது என்று வீட்டில் தேடுகிறேன். அதை வீட்டில் பத்திரமாக வைத்துள்ளதாக என் தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 10 வீடுகள் மாறிவிட்டோம்.
அது எனது வழக்குக்கு ஆதாரம். அதனால்தான் இதுவரை நான் வழக்கு தொடுக்கவில்லை. எனது வழக்கறிஞரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டுத்தான் இருக்கிறோம். அதற்கான வேலையைச் செய்து வருகிறோம். இது ஏதோ நான் சும்ம ஹேஷ்டேக் போட்டுவிட்டுப் போகும் விஷயம் அல்ல. நான் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன்.
பத்திரிகைத் துறையிலேயே விசாகா கமிட்டி அமைக்கவில்லை. ஆனால், சினிமாத் துறை மிகப்பெரியது. இப்போது விஷால் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது சினிமா, சின்னத்திரை என்று யோசிக்கவேண்டும்” என்று சின்மயி தெரிவித்துள்ளார்.