தர்மபுரி பள்ளிப்பட்டு லூர்து மாதா கோயிலில் மாதாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற அண்ணாமலைக்கு சில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணத்தை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூரில் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் மேட்டூர் பகுதியில் இருந்து யாத்திரை நடைபயனத்தை முடித்துவிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி அரூர் செல்லும்போது பி பள்ளிப்பட்டியில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தில் அன்னைக்கு மாலை அணிவித்து செல்ல கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் அழைத்தனர். இதற்கு மரியாதை நிமித்தமாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்க சென்றார். அப்போது ஒரு பகுதி கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை முன்னிறுத்தி நீங்கள் என் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை என கேள்வி கேட்டு நீங்கள் மாலை அணிவிக்க கூடாது, இது புனிதமான இடம், நீங்கள் மாலை அணிவிக்க கூடாது என கிறிஸ்தவர்கள் கோஷங்களை எழுப்பி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞர்களை சமாதானப்படுத்தியும், இளைஞர்கள் எங்கள் அன்னைக்கு மாலை அணிவித்து இழிவு படுத்த வேண்டாம் என கூறி மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய பின்னர், அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“