Advertisment

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
christmas wishes

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Advertisment

அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  



இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை”  “நீ செய்ய நினைக்கும் எயல் எதுவோ அதை உடனே செய், அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்” - என்பன போன்ற தனி மனிதனின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர், அவர் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 25 அன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பிடத் தமிழ்நாடு வந்த தொண்டர்கள் பலர் அவர்களுல் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால்   ‘தமிழ் மாணவன்’ என்று தம் கல்லறையில் எழுதச் செய்த அறிஞர் ஜி.யு. போப், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைத்து தமிழ் செம்மொழி எனப் பறைசாற்றிய அறிஞர் கால்டுவெல், சதுர் அகரதி தந்து, ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர், தமிழ்நாட்டிற்கு அச்சு இயந்திரத்தை முதன்முதல் கொண்டுவந்து தமிழ்நூல்கள் அனைத்தும் அச்சு வடிவம் கொள்ளத் துணைபுரிந்த சீகன் பால்கு ஐயர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை. இதில் பல பெருமக்களுக்கெல்லா நன்றியுணர்வோடு சிலைகள் நிறுவி மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நின்று நிலவச் செய்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு. 

மேலும், 2021- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், 

உபதேசியார் நல வாரியம்

சிறுபான்மையினர் விடுதி மாணவ மானவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, 

கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு. 

ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள்

என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் கிறிஸ்துவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் மணிமகுடமாக கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளேன்.

அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:  “கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என தருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

'நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்' என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “கிறிஸ்துவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், 1951-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2023-ல் மக்கள்தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “அன்பை போதித்த இயேசுபிரானின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் அன்பை பரப்ப வேண்டும்” என கிறித்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:  “மன்னிப்பே மனித வாழ்வின் சிறந்த குணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசு பிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார். இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. 

மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு , கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். அன்பால் மட்டும் தான் உலகை வெல்ல முடியும்; பண பலத்தாலோ, படை பலத்தாலோ உலகை வெல்ல முடியாது என்பதற்கு இன்றைய உலகின் நிகழ்வுகள் தான் அசைக்க முடியாத எடுத்துக்காட்டு. இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும். இயேசுவின் கொள்கைகள் மட்டுமின்றி அவற்றை பின்பற்றுவோரும் வெற்றி பெறுவது உறுதி. எனவே, இந்த உலகில் பொருள் படைத்தவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளை மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக” என்று தெரிவித்துள்ளார்.

இயேசு பெருமான் பிறந்தநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் வி.சி.க சார்பில் திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

திருமாவளவன் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது. ஆகவே தான், கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவி இன்றும் வெற்றிகரமாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகிறது. 

இயேசு பெருமான் சகோதரத்துவத்தின் அடையாளமாகும். எனவே, அவரைப் போற்றுவது என்பது சகோதரத்துவத்தைப் போற்றுவதேயாகும். சகோதரத்துவம் தழைக்குமிடத்தில் தான் சனநாயகம் கோலோச்சும். சனநாயகமும் சமத்துவமும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள வெவ்வேறு புள்ளிகளாகும். இவற்றுக்கு அடிப்படையானதொரு கருத்தியல் தான் சகோதரத்துவம் என்பதாகும். அத்தகைய சகோதரத்துவத்தை தமது உயிர்மூச்சாகக் கொண்டதே இயேசு பெருமானின் கிறிஸ்தவம் ஆகும். 

இத்தகு சிறப்புக்குரிய கிறிஸ்தவத்தை, உலகெங்கும் வாழும் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள மகத்தான பேராளுமையே இயேசு பெருமான் ஆவார். அவரை நினைவுகூர்ந்து இந்நாளில் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதாவது. உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ல கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “இயேசு கிறிஸ்து பிறந்த இந்நந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெறுகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

திருமாவளவன்(விசிக தலைவர்): இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு – தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது. சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

அ.ம.மு.க பொதுச் செயலாலர் டி.டி.வி. தினகரன், இயேசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக் கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Christmas Celebration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment